கோவையில் இதுவரை 496 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உபயோகப்படுத்துபவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை என்ற நோயாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கோவையில் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை கருப்பு பூஞ்சை நோயால் 496 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் இதுவரை 496 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் 239 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீதமுள்ள 257 பேர் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக கருப்பு பூஞ்சை நோயின் தாக்கமும் தணிந்து உள்ளது.
எனவே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்கள் தங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து அதற்கான மருந்துகளை சரியான முறையில் எடுத்து சர்க்கரை அளவை சீராக பாதுகாத்தால் இந்த நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.




