
காதலி தன்னுடன் பேசுவதில்லை என்கிற ஆத்திரத்தில் அவருக்கு தெரியாமல் செல்போன் பதிவு செய்திருந்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கோபிநாதன் (23). கோயம்புத்தூர் அரசு கலைக்கலூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அப்போது தன்னுடன் படித்த இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அது நாளிடைவில் காதலாக மாறியுள்ளது.
நெருக்கமாக இருந்தபோது இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பேசுவது, உரையாடுவது என்று இருந்துள்ளார். அவ்வப்போது இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ காலில் வரச்சொல்லி, அதை அந்த பெண்ணுக்கு தெரியாமல் ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்து வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் காதலனுடன் அவர் பேசுவது குறைந்துபோயுள்ளது. காதலி பேசாமல் இருந்ததால், அவ்வப்போது போன் செய்து பெண்ணிடம் கோபம் காட்டி வந்துள்ளார் கோபிநாதன். ஒருகட்டத்தில் அவரை விட்டு விலகிவிட்டார் இளம்பெண்.
ஆனால் எப்படியாவது காதலியிடம் பேச வேண்டும் என கோபிநாதன் பல்வேறு வகையில் முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய செல்போனில் இருந்த பெண்ணின் ஆபாசமான வீடியோ மற்றும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துவிட்டார்.
இது இளம்பெண்ணுக்கு தெரியவந்ததும் கோயம்புத்தூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கோபிநாதனை கைது செய்த கோவை சைபர் கிரைம் போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




