சென்னை சாலை ஒன்றில் நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த அவசர ஊர்தி வாகனம் திடீரென தீப்பிடித்தை எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள நியூ ஆவடி சாலையில் இரவு நேரத்தில் தனியார் அவசர ஊர்தி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது வண்டியின் முன்பக்கத்தில் இருந்து கருப்பாக புகை வந்துகொண்டிருந்தது.
மற்ற வாகன ஓட்டிகள் இதை கவனித்துச் சொன்னவுடன், அவசர ஊர்தி ஓட்டுநர் ராபின் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டார். வாகனத்திற்கு முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் இருந்துள்ளார்.
உடனடியாக அவரையும் அவருடன் இருந்த குடும்பத்தினரையும் கீழே இறக்கி அப்புறப்படுத்தினார். அவர்கள் துரிதமாக வாகனத்தில் இருந்து வெளியேறினர். இதையடுத்து கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு ராபின் தகவல் கொடுத்தார்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் இறங்கினர். அதற்குள் அவசர ஊர்தியின் முன்பகுதி முழுவதுமாக எரிந்து நாசமானது. எப்படி வாகனம் தீப்பிடித்தது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் உதவி செய்து நோயாளியையும் அவருடைய உறவினர்களையும் வேறொரு அவசர ஊர்தியில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.