சாலை விபத்துகளில் படுகாயமடைந்தவர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களுக்கான முதலுதவி சிகிச்சை எவ்வாறு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மறுசீரமைக்கப்பட்ட காரில் தேசியளவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளார் மாற்றுத்திறனாளி ஒருவர்.
சென்னையைச் சேர்ந்த மொஹமத் ஜாவித் நடனக் கலைஞராக இருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். ஆனால் அவருக்கு சாலை விபத்து ஏற்பட்ட போது, முதலுதவி சிகிச்சை அளித்தவர்கள் முறையாக கையாளததால் முதுகு தண்டுவடத்தில் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் மொஹமத் ஜாவித்துக்கு இடுப்புக்கு கீழே செயல்படாமல் போனது. சக்கர நாற்காலிக்கு அவருடைய வாழ்க்கை மாறியது. தனக்கு ஏற்பட்ட சோகம் வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சாலை விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி சென்னையில் இருந்து இதற்கான பயணத்தை துவங்கினார். தொடர்ந்து கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டு தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளார். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கு ஏற்றவாறு மறுசீரமைக்கப்பட்ட காரில் ஜாவித் பிரச்சார பயணம் செய்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், இயல்பாகவே இந்தியர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். ஆபத்தில் இருப்பவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்கள். எனக்கு விபத்து ஏற்பட்ட போது அப்படிப்பட்ட கருணை உள்ளம் கொண்ட ஒருவரால் தான், இன்று நான் உயிருடன் இருக்கிறேன். எனினும், என்னை விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸுக்கு அப்புறப்படுத்தும் போது முறையாக செயல்பட்டு இருந்தால் என்னுடைய முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருக்காது. நான் நடமாடி கொண்டு இருப்பேன். அப்படிப்பட்ட அறியாமையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த பிரச்சாரத்தை துவங்கியுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா, தென் கிழக்கு மாநிலங்கள், டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் செல்ல திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து புபனேஷ்வர், கேரளாவுக்கு செல்லும் அவர் மே 26-ம் தேதி பெங்களூருவில்தன்னுடைய பயணத்தை முடிக்கிறார். மொஹமத் ஜாவித்தின் பயணம் வெற்றிக்கரமாக அமைந்திட அவருக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. உதவும் மனம் படைத்தோர், 9840277706 என்கிற ஜி.பே (Google Pay) நம்பருக்கு உங்களால் முடிந்த நிதியுதவி அளிக்கலாம்.