இரண்டு சிறுமிகளிடம் அவர்களுடைய ஆபாசமான புகைப்படங்களை காட்டி பணிய வைக்க முயற்சி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கேரளவைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுடன் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலமாக சென்னையைச் சேர்ந்த மார்க் டி க்ரூஸ் (19) என்கிற இளைஞர் நட்பாக பேசி வந்துள்ளான். நாளிடைவில் அந்த நட்பை தவறாக பயன்படுத்தி இரண்டு சிறுமிகளிடம் நெருக்கம் காட்டியுள்ளான்.
அவனது பேச்சில் மயங்கிய இரண்டு சிறுமிகளும், தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை இளைஞருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனித்தனியாக சிறுமிகளிடம் மார்க் டி க்ரூஸ் பேசி வந்ததால், அவனுடைய நோக்கம் குறித்து அவர்கள் இருவருக்கும் புரியவில்லை.
இந்நிலையில் சிறுமிகளிடத்தில் அவர்கள் அனுப்பி வைத்த ஆபாச புகைப்படங்களை காட்டி, மிரட்டியுள்ளான். சொல்வதை கேட்க வேண்டும், இல்லையென்றால் சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பதிவேற்றிவிடுவேன் என்று கூறி, தன்னுடைய ஆசைக்கு சிறுமிகளை பணிய வைக்க முயற்சித்துள்ளான்.
இதனால் பயந்துபோன சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோர்களிடத்தில் தெரிவித்துள்ளனர். அவர்கள் கேரள மாநில சைபர் குற்றப்பிரிவுக்கு புகார் அளித்தனர். அவர்கள் தமிழக போலீசாருக்கு புகாரை அனுப்பி வைத்தனர்.
அதையடுத்து இவ்வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வரும் மார்க் டி க்ரூஸை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடமிருந்து 1 செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.