முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு புகைப்படத்தை பதிவிட்ட நிலையில், பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ் தாயின் படத்தை பதிவிட்டது சமூகவலைதளங்களில் கவனமீர்த்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 37-வது முறையாக நடைபெற்ற அலுவலக மொழி கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கான இணைப்பு மொழி இந்தி தான் என்று தெரிவித்திருந்தார். இதற்கு நாட்டில் பல்வேறு மொழி ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய ட்விட்டரில் தமிழணங்கு புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த நெட்டிசன்கள் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்ட தமிழணங்கு புகைப்படத்தை கொண்டாடினர்.
இந்த விவகாரம் கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதே தமிழணங்கு புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ”அதில் எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே!” என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
வாடிகன் சிட்டியில் மறைந்த தேவசகாயத்தை புனிதராக அறிவித்தார் போப் ஃபிரான்சிஸ். அதை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் இந்த படத்தையும் கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ் தாயின் படத்தை போட்டு அதே அதே பாடலை பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து முதல்வருக்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ.க-வின் அண்ணாமலை ட்விட்டரில் தமிழ் தாய் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாகக் கூறி, நெட்டிசன்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.