தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான 2ம் கட்ட மாணவர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டது.
சென்னை:
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி 8,608 தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 15,771 இடங்கள் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கைக்கு 86,318 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மீதமுள்ள 55,000 இடங்களை நிரப்புவதற்கான 2-ம் கட்ட சேர்க்கைப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
மீண்டும் விண்ணப்பம்:
இதையடுத்து இன்று முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம், பெற்றோர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம். நவ.7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வான மற்றும் நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் விவரம் நவம்பர் மாதம் 11-ந் தேதி தெரிவிக்கப்படும். ஒரு பள்ளியில் விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்திருந்தால் நவம்பர் 12-ந் தேதி குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களை நவம்பர் 15-ந் தேதிக்குள் உரிய பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.