ஓடும் பேருந்தில் மாணவ, மாணவியர் மது அருந்திய சம்பவம் தொடர்பாக உரிய முறையில் விசாரிக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் பள்ளி மாணவிகள் சிலர், சக மாணவர்களுடன் சேர்ந்து ஓடும் பேருந்தில் மது அருந்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதுதொடர்பாக விசாரித்த போது, வீடியோவில் இருந்த மாணவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
திருக்கழுக்குன்றத்திலிருந்து தச்சூருக்கு பயணிக்கும் பேருந்தில் இப்படியொரு சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பேசிய மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி வருகின்றன. அதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவருடன் சேர்ந்து பள்ளி மாணவி பேருந்து படிகளில் தொங்கியவாரு சாகசத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. வருண்குமார் சம்மந்தப்பட்ட மாணவிக்கும் மாணவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு தரப்பில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.