எல்.இ.டி. விளக்குகள் முறைகேடு தொடர்பாக உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 12,524 கிராமங்களில் உள்ள 23 லட்சத்து 72,412 தெருவிளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம், 14-வது நிதிக்குழு மற்றும் மாநில நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.969.32 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.
இதில், அதிக விலைக்கு எல்.இ.டி. விளக்குகளைக் கொள்முதல் செய்ததன் மூலம் 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்யாமல், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அப்பாவுக்கு பதிலளித்திருந்தனர். இந்த நிலையில், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது புகாரை ஆளுநருக்கு அனுப்பி, அவரது ஒப்புதலைப் பெற்று, அமைச்சருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




