வாய்மேடு அருகே துளசியாப்பட்டிணத்தில் அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டும் இடத்தை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணம் கிராமத்தில் அவ்வையார்,விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் அவ்வையாருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அவ்வை விழா நடைபெறும். இந்த விழாவை 2004ம் ஆண்டுவரை கிராம மக்கள் கொண்டாடி வந்தனர். 3-6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது 2005ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சென்று 2 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பின் காரணமாக விழா சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆயிவின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
-பா.ஈ.பரசுராமன்.




