தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி தேர்வு எழுதச்சென்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத்தேர்வு ஒரே நேரத்தில் 590 மையங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் 22 மையங்களிலும் நேற்று தொடங்கிய தேர்வு 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 30 மையங்களில் நேற்று தொடங்கிய நுழைவுத்தேர்வு காலை, மாலை என நடைபெற்றது. தேர்வு மையங்களில் ஒன்றான திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஒரு மணி நேரம் காலதாமதமாக வினாத்தாள் வழங்கப்பட்டது.இதையடுத்து பெற்றோர்களும், மாணவர்களும் தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுக்குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், நுழைவுத் தேர்வுக்கான மேலிட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளார்கள். அவர்கள் நுழைவுத்தேர்வில் நடைபெற்ற அனைத்து குளறுபடிகளையும் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.




