தமிழகத்தின் அந்த இருண்ட காலம் மீண்டும் வந்துவிடுமோ என்ற மக்களின் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால், மின்சாரம் வாங்க தமிழகத்துக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையில் 3ல் ஒருபங்கிற்கும் குறைவாகவே தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. பெருமளவு மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்துதான் வாங்கப்படுகிறது (தமிழகத்தின் மரபுசார் எரிசக்தி ஆதாரத்தின் 16652 மெகாவாட் மின் நிறுவுதிறனில் 4335மெகாவாட் தனியார் மின் உற்பத்தியிலிருந்தும், 6972மெகாவாட் மத்திய அரசின் மின் நிலையங்களின் பங்காகவும் பெறப்படுகிறது)
வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடியாவிட்டால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை,தொழிற்துறையானது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறைந்த தொகையே பாக்கி உள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்தாலும், அந்தத் தொகையினை உடனடியாகச் செலுத்தி தடையை விலக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அந்த “இருண்ட காலம்” வந்துவிடுமோ என்ற தமிழக மக்களின் அச்சம் போக்கப்படவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




