
சென்னை ஐ.ஐ.டி-யில் மேலும் பலருக்கு பரிசோதனையின் முடிவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை சொற்பமாக இருந்து வந்தது. ஆனால் நேற்று சென்னை கிண்டியிலுள்ள ஐ.ஐ.டி-யில் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து அங்குள்ள பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலருக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னை ஐ.ஐ.டி-யில் ஆய்வு மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கு மருத்துவ பணியாளர்கள் தங்கி கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும் சென்னை ஐ.ஐ.டி-யில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. எனினும் அவர்களுடைய ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது. அதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு மேலும் 666 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா உயர்ந்தாலும் மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லை என்று தெரியவந்துள்ளது. சென்னையிலுள்ள ராஜீவ் காந்த மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை, கிண்டி பொது மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.
இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை ஐ.ஐ.டி-யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவித்தார்.




