தேர்வின் வெற்றி,தோல்வி ஒருவரின் வாழ்வை முடிவு செய்யாது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை:
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா நேற்று காலை தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தர்மபுரி மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறும் சூழ்நிலையில், 3 மாணவர்களும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பக்கத்தில் இதுகுறித்து,நீட் தேர்வு பயத்தில் தருமபுரியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை என்ற செய்தியை கேட்கும் போது மனம் பதைக்கிறது.மாணவர்கள் இலட்சியம் கொண்டு உறுதியுடன் இருக்கவேண்டும்.ஆனால் தன் கனவு நிறைவேறும் முயற்சிக்கு முன்னாலேயே நம்பிக்கை இழந்து இவர்கள் இந்த முடிவை எடுப்பது.
ஒரு தேர்வின் வெற்றி தோல்வி மட்டும் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது. தயவு செய்து நம்பிக்கையோடு இருங்கள். பெற்றவர்கள் உங்கள் நண்பர்கள் யாரும் நீங்கள் டாக்டர் ஆகவில்லை என்ஜினியர் ஆகவில்லை என்று உங்களை வெறுக்கப்போவது இல்லை.உங்களை இழந்த உங்கள் பெற்றோரின் வலியை எதுவும் சரிசெய்யாது. நம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுவதில்தான் அவர்களுக்கு நீங்கள் காட்டும் அன்பு இருக்கிறது.என்று அவர் கூறினார்.




