பேரறிவாளனை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜோலார்பேட்டை:
முன்னாள் பிரதமர் ராஜீவகாந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன். சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
கண்ணீர்மல்க வரவேற்பு :
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன், ஜோலார்பேட்டை, இடையம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார். பரோல் காலத்தில்பேரறிவாளன் வெளியே செல்லவும், அறிமுகம் இல்லாத ஆட்களை சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் காவல் துறை அனுமதியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவரது தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
என் மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு 90 நாட்கள் பரோல் கேட்டேன். ஆனால், 30 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என் கணவர் குயில்தாசன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது அவர் கிருஷ்ணகிரியில் உள்ள என் மகள் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவரை சந்திக்க பேரறிவாளனுக்கு அனுமதி கிடைக்குமா? என தெரியவில்லை. ஆனால், அதற்காக முயற்சி செய்வேன்.
தமிழக அமைச்சரவையும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் தமிழக ஆளுநர் அதற்கான உத்தரவை வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
விடுதலை வேண்டும்:
இதுவரை யாரும் அனுபவிக்காத தண்டனையை என் மகன் அனுபவித்துவிட்டார். இளமை காலம் முழுவதும் சிறையிலேயே கழிந்துவிட்டது. தற்போது பல்வேறு உடல் உபாதைகளால் அவர் அவதிப்படுகிறார். அவரது உடல் நிலையை சரி செய்து கொள்ள பரோல் வழங்கப்பட்டுள்ளது. இது போதாது, பேரறிவாளனுக்கு நிரந்தர விடுதலை வேண்டும் என்பதே என் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.




