கனரக வாகனத்துடன் இணைக்கப்பட்டு இருந்த நான்கு சக்கர டயர் வண்டி கழன்று சாலையில் ஓடி ஏற்படுத்திய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 8 மாத கர்ப்பிணி பெண் வயிற்றில் கம்பி குத்தி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது 8 மாத கர்ப்பிணி மனைவி கார்த்திச் செல்வி மற்றும் தாயார் லட்சுமியுடன் இருசக்கர வாகனத்தில் தீயனூர் என்கிற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அவர்களுடைய வாகனம் கிருஷ்ணாபுரம் என்கிற பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அவர்களுக்கு முன்னே சரக்கு ரக வாகனம், நான்கு சக்கர தள்ளுவண்டியை கட்டி இழுத்துக் கொண்டு போனது. அப்போது நான்கு சக்கர தள்ளுவண்டி கனரக வாகனத்தில் இருந்து கழண்டு சாலையில் ஓடியது. அது நேராக மணிகண்டன் வண்டி மீது மோதியது. இதில் மணிகண்டன், அவருடைய மனைவி கார்த்திச் செல்வி மற்றும் தாயார் லட்சுமி மூவரும் தூக்கிவீசப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவசர ஊர்தி வாகனத்தை வரவழைத்து மூன்று பேரையும் மீட்டனர். ஆனால் கர்ப்பிணி பெண் கார்த்திச் செல்வி வயிற்றில் கம்பி குத்தி இருந்தது. இதனால் மருத்துவமனையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து விபத்து ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த சரக்கு வாகன ஓட்டுநர் நவீனை போலீசார் கைது செய்தனர். சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.