சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தானது பயணிகளுக்கு இடையே ஆன போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரையில் வாகனங்கள் நிறுத்த ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (நாளை) முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இனி 6 மணி நேரம் வரை ரூ.20, 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறைகள் எல்லாம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.இது போக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது. அதாவது மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே தொடர்ந்து வசூலிக்கப்படும் எனவும் மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை ஒருபோதும் கிடைக்காது எனவும் அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள்தான். இதில் ஏன் பயணிகளிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என மின்சார ரெயில் பயணம் செய்யும் பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.