மக்கள் முன்னெடுத்த போராட்டத்தில் பங்கெடுத்த சீமான், செய்தியாளர்கள் சந்திப்பின் போது அப்படியே மயங்கி கீழே விழுந்த சம்பவம் ட்விட்டர் நேரலையில் பதிவாகியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியிலுள்ள அண்ணாமலை நகரில் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார்.
மக்களுடன் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்திப்பதற்காக அவர் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சீமான் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு அருகிலிருந்தவர்கள், அவரை தாங்கிப் பிடித்து முதலுதவி அளித்தனர். அதையடுத்து அவசர ஊர்தி வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும், உடனடியாக வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வெயில் காரணமாக ஏற்பட்ட மயக்கத்தில் அவர் கீழே விழுந்திருக்கக்கூடும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர். சீமானின் செய்தியாளர் சந்திப்பு, கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் நேரலை செய்விருந்த சமயத்தில் அவர் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது.