தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்டணம் செலுத்தாத மாணவர்கள்:
இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கடந்த 26-ந் தேதி முதலமைச்சர் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. பருவத் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், முதலமைச்சரும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதும் – ஊரடங்கால் பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை.
பருவத் தேர்வுகளுக்கான தேர்வுக்கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஊரடங்கு மார்ச் 24-ம் தேதியே அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டன. ஏழை, நடுத்தர மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தங்கள் பிள்ளைகளின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்தனர். சில கல்லூரிகளில் 70 சதவீத மாணவர்கள் கூட பருவத் தேர்வுக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்துள்ளார்கள்.
விலக்கு அளிக்க வேண்டும்:
தமிழக அரசு நியமித்த உயர்மட்டக்குழு, கட்டணம் செலுத்திய மாணாக்கர்கள் குறித்து மட்டும் பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுத்துள்ளார். தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை முதலமைச்சர் கை கழுவியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் பல கல்லூரி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
ஆகவே, கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இறுதியாண்டுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மூலம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிறுவனங்கள், அந்த வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக் கூடாது என்று அரசின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.