தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் புனித ஜார்ஜ் கோட்டையிலே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2007-11ம் ஆண்டில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகத்தை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி கட்டினார். ஆனால், அதற்கு அடுத்து பதவியேற்ற ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டையிலே சட்டசபை வளாகம் இயங்கும் என்று அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், கொரோனா சூழல் காரணமாக சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் வரும் 14-ந் தேதி முதல் தொடங்க உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் வரலாறு
இந்த நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையை தவிர பிற இடத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவது இது முதன்முறையல்ல. 1921 முதல் 1937 வரை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. பின்னர், சென்னை மாகாணத்தின் முதன் சட்டசபை கூட்டத்தொடர் 1937ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி முதல் 1938ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி வரை நடைபெற்றது. பின்னர், 1938ம் ஆண்டு ஜனவரி 27 முதல் 1939ம் ஆண்டு அக்டோபர் 26 வரை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
கோட்டை முதல் கலைவாணர் அரங்கம்
பின்னர், 1946ம் ஆண்டு மே 24 முதல் 1952ம் ஆண்டு மார்ச் 27 வரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்தப்பட்டது. பின்னர், 1952ம் ஆண்டு மே 3-ந் தேதி முதல் 1956ம் ஆண்டு டிசம்பர் 27 வரை ஓமந்துாரார் அரசு தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. 1957ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி முதல் 1959ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி வரை புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்தப்பட்டது. பின்னர், 1959 ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊட்டியில் உள்ள அரன்மொர் அரண்மனையில் நடத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 1959ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி முதல் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.