திருச்சியில் இன்று முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/trichyjpg.jpg?resize=605%2C339&ssl=1)
திருச்சி மாநகரில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. நேற்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3755ஆக அதிகரித்துள்ளது. இதில் 2297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1398 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 60 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கடை வீதிகள், மார்க்கெட்டுகள் ஆகிய இடங்களில் தனிமனித இடைவெளியைப் பொதுமக்கள் கடைப்பிடிக்காததே காரணமாக அமைகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், பலரும் பொருட்படுத்தாமல் உள்ளனர். இதனிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருச்சி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய மெடிக்கல் அசோசியேஷனின் திருச்சி கிளை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், திருச்சி மளிகை, மண்டி, ஆயில், வெல்லம்- சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தினர் தாமாக முன்வந்து வியாபார நேரத்தை குறைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கில் ஜூலை 29 முதல் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள 130 கடைகள் இனி காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவித்துள்ளனர்.