மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள பிரபல மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். சாதாரண சிகிச்சைக்காக சென்றவர், அங்கு தொடர் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தே.மு.தி.க கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நீரிழிவு பிரச்னை காரணமாக விஜயகாந்தின் காலிலுள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின் படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.