![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2023/01/1070509-dsf.webp?resize=750%2C450&ssl=1)
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் ஹரி ஒரில் நகரில் உள்ள கடற்கரை அருகே சீ வேல்டு தீம் பார்க் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. கடற்கரை, கேளிக்கை பூங்கா உள்ளதால் இந்த இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இதனிடையே, சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப கேளிக்கை பூங்கா நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர்களும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், கேளிக்கை பூங்கா அருகே உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து இன்று மதியம் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அதேவேளை, மற்றொரு ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக கீழே இறங்கியது. அப்போது, எதிர்பாராத விதமாக நடுவானில் 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.