இளைஞர்களின் கனவு வாகனமாக கருதப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விற்பனை, இந்தியாவில் முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 1200 சி.சி. என்ஜின் திறன் கொண்ட பைக்குகளை அறிமுகம் செய்தது. அதுவேகம் மட்டுமின்றி இதன் மாடரன் லுக், அட்டகாசமான அவுட்லேயிங், பயனாளர்களுக்கான சொகுசான இடவசதி போன்ற பல்வேறு காரணங்களால் இந்நிறுவனத்தின் பைக்குகளுக்கு இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

சர்வ சாதரனமாக அந்நிறுவனத்தின் ஒரு பைக் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹார்லி டேவிட்சனின் ஆரம்ப விலையே 4.69 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், சாப்ட்டைல் ரேஞ் என்ற பைக் 12 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் 100 ஆண்டுகளாக அதிக சி.சி. திறன் கொண்ட ஆகச்சிறந்த பைக்குகளை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் இந்த பைக்குகளில் விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாத இடைவெளியில் நாடு முழுவதும் வெறும் 100 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் இது மிகவும் குறைவான விற்பனையாக பார்க்கப்படுகிறது

இந்நிலையில், கொரோனாவின் பாதிப்பால் அடுத்த பல ஆண்டுகளுக்கு எதிர்பார்த்தபடி ஹார்லி டேவிட்சனின் வாகன விற்பனை இருக்காது என அந்நிறுவனம் கணித்துள்ளது.
எதிர்காலத்தில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விற்பனை மேலும் சரியும் என்பதால் விரைவில் இந்தியாவில் உள்ள ஷோரூம்களை மூட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




