– லட்சுமி சங்கரன்

“கோவாலு! எந்திரிலே. அடே! நாசமாப் போறவனே! ஏந்திரிடா.”
பாவம் கோவாலு. ஆத்தா கூப்பாடு போட்டது அவன் காதில் விழவேயில்லை. அவன் வயது அப்படி. படுத்தால் உறங்கிவிடுவான். சலனமில்லாமல் தூங்குவான்.
மாரியம்மாவுக்கு எரிச்சலாக இருந்தது. பானையிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, மகன் முகத்தில் அடித்தாள்.
“ஏந்திரிடா பொறம்போக்கு.”
வாரிச் சுருட்டிக்கொண்டு, கண்ணைப் பிசைந்துகொண்டு எழுந்தான். அதற்குள்ளா பொழுது விடிந்துவிட்டது. இப்போது தான் படுத்த மாதிரி இருந்தது.
“ஏ நாசமாப் போறவனே! மலங்க மலங்க முளிக்காத. போய்ப் பல்ல வெளக்கிக்கினு வெரசா வா.”
பல் தேய்த்து விட்டு வந்தவனுக்கு ஒரேயொரு இட்லி கொடுத்தாள்.
‘உம். சட்டுனு துன்னுப் போட்டு, சட்டினித் தூக்கயும், எலக்கட்டையும் எடுத்துக்க. பொஸ்தகப் பைய மறந்துடாதே.”
இட்லி வியாபாரம் முடிந்தவுடன் பள்ளிக்கூடம் போவான். அங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மாலை வீட்டுக்கு வருவான். அவன் வயது பத்தானாலும், 3-ஆம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் எதுவும் புரியவில்லை. வீட்டில் கவனிப்பாரும் இல்லை.
அவன் நயினா கன்னியப்பன், பஸ் ஸ்டேண்ட் டீக்கடையில் எடுபிடி வேலை செய்துக் கொண்டிருந்தான். சாப்பாட்டுக்குப் பணம் கொடுப்பான். டீக்கடையில் மீந்த வடை, நமுத்துப் போன புரை போன்றவற்றையும், அவ்வப்பொழுது கொண்டு வருவான்.
“ராத்திரில இப்போ கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட்ல நடமாட்டம் சாஸ்தியாயிருக்கு. பக்கத்துல கும்மோணத்துல கோயில்ல எதுனாச்சும் நடந்தா, ராவு முச்சூடும் வண்டி வந்துகினு போய்க்கினு இருக்குது. டீக்கடைல வியாவாரம் நல்லா நடக்குது.. மொதலாளி ராவுல இருக்க சொல்லுறாரு. ஒன்னு ரெண்டு கூடத் தராறு” என்றான்.
அப்படிப்பட்ட நாட்களில் இரவு வீட்டுக்கு வரமாட்டான். யாரிடமாவது சேதி சொல்லி அனுப்புவான்.
இப்படித்தான் அவன் ஒரு நாள் இரவு வீட்டுக்கு வரவில்லை. மறுநாளும் ஆள் தலையைக் காட்டவில்லை.
பஸ் ஸ்டேண்ட் பக்கம் போனாள் மாரியம்மா. கன்னியப்பன் எங்கே? என்றவளைப் பார்த்து, “அதையேதா நானும் ஒன்னக் கேக்கறேன்” என்றான் டீக்கடைக்காரன். அப்புறம் அங்கேயிங்கே விசாரித்ததில் தெரிய வந்தது, கொய்யாப் பழம் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்த சரோசாவுடன், எங்கோ போய்விட்டான் என்பது.
அப்புறம் தினமும் வட்டிக் கட்டவேண்டும் என்ற அநியாயக் கட்டளையுடன் பணம் கடன் வாங்கிக் கோவில் அருகில், கடை வீதியில் இட்லி விற்க ஆரம்பித்தாள். ஒரு வேளைக் கஞ்சி குடிக்க முடிந்தது.
சாக்கை விரித்து, இட்லித் தூக்கைக் கீழே வைத்தாள். பக்கத்திலேயே கோவாலு இலைக் கட்டையும், சட்னித் தூக்கையும் வைத்தான். “டேய் கோவாலு எடத்தப் பாத்துக்க. விட்டுடாதே. நா போய் ஒரு கொடம் தண்னி கொண்டாறேன்” என்று போனாள்.
கோவிலில் வருடாந்திர விழா நடந்துக் கொண்டிருந்தது. வருவோர் போவோர் கூட்டம் அதிகமாயிருந்தது.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் கோவாலு. ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினான். மாடு ஒன்று இலைக்கட்டைத் தின்று கொண்டிருந்தது.
நல்ல முரட்டுக் காளையாயிருந்தது. பயமாயிருந்தது. இருந்தாலும், “தே, தே ,போ” என்று விரட்டப் பார்த்தான். அது இலைக்கட்டை இழுத்துக் கொண்டு போய்விட்டது.
திக் பிரமையுடன் கோவாலு நின்று கொண்டிருந்தான்…
ப்ளாஸ்டிக் குட நீருடன் வந்துவிட்டாள் மாரியம்மா. “எலே, ஒன்ன ஜாமானப் பாத்துக்கன்னா இப்டியா மாடு, எலயத் திங்கவிடுவ?” இரண்டு அடி வைத்தாள்.
மெயின் ரோட்டாண்ட போய் எல கெடைக்குதானு பாத்தாறேன். ஓட்டமும் நடையுமாக அங்கிருந்த காய்கறிக் கடைக்கு வந்தாள். அவனிடம் இலைக்கட்டு இல்லை. “லாரியொண்ணும் இன்னிக்கு வரல. ஏதோ ஸ்ட்ரைக் போல” என்றான்.
பக்கத்தில் பெரிய பந்தல் போட்டிருந்தது. நாட்டாமைக்காரர் வீட்டில் அன்று அன்னதானம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தாள். பந்தல் வாசலில் பூ, பழம், இலை, அரிசி, பருப்பு என்று சாமான்கள் வேன்களிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன. ஏற்பாடு செய்பவர்கள் அங்குமிங்கும் வேலையாய்ப் பறந்துக் கொண்டிருந்தார்கள்.
விரைவாக அங்கே போனாள். முதலில் இவள் சாப்பாடு கேட்பதாக நினைத்துக் கொண்டவர்கள் “மதியம் ஒரு மணிக்குத்தான் சாப்பாடு, போம்மா” என்றார்கள். எப்படியோ முண்டியடித்துச் சாமான் இறங்குவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆளிடம் போய், “ஐயா, எனக்கொரு எலக்கட்டு கொடுங்கய்யா. கைல இப்பக் காசில்ல. 10 மணிக்கு இட்லி வியாவாரம் முடிஞ்சு கொண்டாறேன்” என்றாள்.
இவள் சொல்வதைப் புரிந்துகொள்ளச் சில கணங்கள் பிடித்தது அவனுக்கு. “எலையெல்லாம் கெடையாதும்மா. லாரி ஸ்ட்ரைக் தெரியுமில்ல? நாட்டாமைக்காரர் யார் யார் கிட்டியோ சொல்லி, ப்ரைவேட்டு வேன்ல வந்து எறங்குது சாமானெல்லாம். எடத்தக் காலி பண்ணு” என்று சிடுசிடுத்தான்.
சலிப்புடனும், கோவத்துடனும் இட்லிக் கடைப் பக்கம் திரும்பி வந்தவள், அங்கே நின்றுக் கொண்டிருந்த கோவாலுவின் முடியைப் பிடித்து உலுக்கி, அடிக்கத் தொடங்கினாள்.
“ஏய்! நிறுத்து. இன்னா நீ புள்ளிய அடிச்சே கொன்னுடுவ போலருக்கே?”
“யாரது?” திரும்பினாள்.
பீடி பிடித்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தான் கதிர்வேலு. அவன் இதே கடை வீதியில், மதியம் பட்டை சோறு விற்பவன். அவனை ரவுடி என்றார்கள். அவன் சாமி இல்லை என்று சொல்லுவான். கோவிலுக்குப் போகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்வான். ஒரு பாக்கெட் பிரியாணியும், கள்ளச் சாராயமும் கொடுத்தால், அரசியல் கூட்டத்தில் கோஷம் போடப் போவார்கள், அவனும் அவன் சகாக்களும்..
அவனைப் பார்த்தாலே பயந்து சாவாள் மாரியம்மா.
அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் வெடித்தாள்.
“உனிக்கு இன்னாய்யா தெரியும்? நா பெத்த சனியன் வேடிக்க பாத்துகினு நிக்க சொல, காள மாடு எலக் கட்ட கடிச்சு, இஸ்துகினு போய்டுச்சு. கஸ்டமருக்கு நா எதுல இட்லி வச்சுக் கொடுக்க? இன்னிக்கு லாரி வேற வராதுன்னுட்டாங்க. எந்தக் கடீலயும் எல இல்ல.”
அதுக்காவப் புள்ளயப் போட்டு அந்த மொத்து மொத்துறியே?. இன்னிக்கு எலவசமா சோறுபோடப் போறாங்கல்ல. எங்கிட்ட எவனும் பட்ட சோறு வாங்கித் துண்ண வரமாட்டான்.. புள்ளிய அனுப்பு. மந்தார எலக்கட்டுத் தாரேன்”
மாரியம்மாவுக்கு அப்பாடா என்றிருந்தது. “நீ அந்தச் சாமி புண்யத்துல நல்லாருக்கணும்யா” என்றாள்.
“தே! சாமி, கீமின்னு எங்கிட்ட பேசின, அப்பால எனக்குக் கெட்ட கோவம் வந்துடும்.. சரி. சரி. வாடா கோவாலு எங்கூட” என்றான் கதிர்வேலு.
ஓர் ஏழைக்குத்தான் இன்னொரு ஏழையின் கஷ்டம் புரியுமோ? இதைத்தான் சாமி என்கிறார்களா? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
– கதைப் படிக்கலாம் – 8
இதையும் படியுங்கள் : கல் உருண்டை!




