ஏ.ஐ.சி.டி.இ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் மறுத்து வந்த நிலையில் அந்த கடிதம் வெளியானது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களை திரட்டி தேர்வு எழுதுவது கடினம் என்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர பிற ஆண்டு மாணவர்கள் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார். இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால் தமிழக அரசு சார்பில் , ஏ.ஐ.சி.டி.இ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என்று உயர்கல்வி அமைச்சர் மறுத்து வந்தார்.இந்த நிலையில் ஏ.ஐ.சி.டி.இ கடிதம் வெளியாகியுள்ளது.அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஆக.30-ந் தேதி ஏ.ஐ.சி.டி.இ கடிதம் அனுப்பியுள்ளது. உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் ஏ.ஐ.சி.டி.இ தலைவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.