இனி கட்சியில் எது நடந்தாலும் ஓ.பி.எஸ் ஒப்புதல் இல்லாமல் நடக்க முடியாது. அது ஓ.பி.எஸ்சிற்கு அளிக்கப்பட்டுள்ள ஒற்றை கையெழுத்து எனும் அதிகாரம் தான்.

அ.தி.மு.க கட்சியை எம்.ஜி.ஆர் ஆரம்பித்த போது, அதில் அன்பும் அபிமானமும் கொண்டு தி.மு.கவினர் இணைந்தனர். எம்.ஜி.ஆரின் வள்ளல் குணம், எளிதில் அணுகும் நிலை, கட்சிக்காரர்களிடம் அவர் காட்டிய அன்பு அ.தி.மு.க பெரும் இயக்கமாக வளர்ந்தது. அதனால் தான் அவர் மறையும் வரை கட்சி ஆட்சியில் இருந்தது. பல இளம் தலைவர்களை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியின் தலைவராக யார் யாரோ முயன்றும் ஒருவரால் மட்டுமே அது முடிந்தது. அது ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் ஒரு பாணி என்றால் ஜெயலலிதா ஒரு பாணியில் கட்சியை வளர்த்தார். ராணுவக்கட்டுப்பாடு என்பார்களே அதுபோன்று அவர் கட்டுப்பாடுகள் வைத்திருந்தாலும் கட்சியில் யார் சரியான ஆள் என அறிந்து அவர்களுக்கு சரியான இடத்தை ஜெயலலிதா அளித்திருந்தார்.
கட்சியில் அனைத்து விஷயங்களும் சரியாக நடக்கவேண்டும்.யாரும் தனியாக ஆட முடியாது. தலையிருக்க வால் ஆட முடியாது. கட்சியில் சிறு பிரச்சனை என்றாலும் சம்பந்தப்பட்டவர் மீது உடனடி நடவடிக்கை வரும். இதன் விளைவு கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. தி.மு.க, அ.தி.மு.க இரண்டுக் கட்சியிலும் கீழிருந்து மேலே வரை ஒரு கட்டுமானம் இருக்கும். ஒருவரை மீறி ஒருவர் இயங்க முடியாது.
அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வலுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் கட்சித் தலைமையிடம் எப்போது விசுவாசத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருப்பார்கள். இவ்வளவு முன்னுரைகள் எழுதக்காரணம், கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர், ஆட்சியில் பொறுப்பில் இருப்பவர் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால் அங்கு மாவட்டச்செயலாளர்கள் முதலில் நிற்பார்கள். அழைப்பிதழ், பேனர், போஸ்டரில் சம்பந்தபட்ட தலைமை படம் போடுவார்கள். இது தான் கட்சியில் வழக்கம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.கவில் ஒரு காட்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் பெயரை, படத்தை போடாமல் பேனர், போஸ்டர், அழைப்பிதழ் அடிப்பது சாதாரண நிகழ்வாக இருந்தது. இதற்கு காரணம் எதிரணி தலைவரை மகிழ்விக்கவும், ஓ.பி.எஸ் செல்வாக்கு மிக்கவர் இல்லை என்கிற எண்ணமும்தான்.
ஆனால் கட்சியில் இணைந்த ஓ.பி.எஸ்க்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. அவர் கட்சியில் வளர்ந்த காலத்திலிருந்து ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் ஏன் முதல்வராக இருந்தவர், அவர் பார்க்காத ஆட்களா? ஆனாலும் தற்போதுள்ள நிலையில் பிரச்சினை எதுவும் செய்யவேண்டாம் என காத்திருந்தார். இப்படியே 2 ஆண்டு காலத்திற்கு மேல் ஓடியிருக்கும்.
ஓ.பி.எஸ் பக்கம் அதிக அளவில் கட்சி ஆட்கள் வராததற்கு இன்னொரு முக்கிய காரணம், அவர் வலுவான இலாகா உள்ள அமைச்சராக இல்லாததே. முதல்வர், அவர் சார்ந்த அமைச்சர்கள் வலுவான இலாகாக்களை வைத்திருந்ததால் கட்சியினர் அவர்களை நாடி பயன்பெறுவதும், பயப்படுவதும் வாடிக்கையாக இருந்தது.
இது ஆட்சியில், ஆனால் கட்சியில் ? இதற்காத்தான் ஓ.பி.எஸ் பொறுமையாக இருந்தார் எனலாம். மற்றொரு முக்கிய காரணம் கட்சி ஒற்றுமை முக்கியம், பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் போராடி பெற்ற வெற்றி, அதனால் அமைந்த ஆட்சி அது தன்னால் கெட்டு விடக்கூடாது என ஓ.பி.எஸ் பொறுமை காத்தது சாதாரண ஆட்களுக்கும் சீண்டிப்பார்க்க தோன்றியது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிலும் சென்னை அதை சுற்றியிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் முதல்வருடன் இருக்கும் நெருக்கத்தால் செய்த அலட்சியங்கள் பல உண்டு. எத்தனையோ பேரைப்பார்த்தவர், கட்சியில் சின்னப்பொறுப்பில் உள்ளவர்களுடன் சரிசமமாக இறங்கக்கூடாது என்று நினைத்ததால் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் இது போகப்போக அதிகரித்ததும்,கட்சியில் ஒரு பக்கமாக அனைவரும் சேர்வதும் அனைத்தும் ஓபிஎஸ்சை சிந்திக்க வைத்தது என்கின்றனர் அவரைப்பற்றி அறிந்தோர்.

பொறுமையாக இருப்பதற்கும் அடங்கிப் போவதற்கும் வேறு வேறு அர்த்தம் உண்டு. அதன் வித்தியாசத்தை கடந்த வாரத்தில் ஓ.பி.எஸ் லேசாக காட்டினார், ஆடிப்போய்விட்டனர் மக்கள். அனைத்தையும் மேலே இருக்கிறவர் பார்த்துக்கொள்வார் என்று ஆடியவர்களுக்கு மேலே இருப்பவருக்கே என் பொறுமைதான் அரசியல் நகர்வை செய்ய வழிவகுக்கிறது, என்னையவே அசைத்துப்பார்க்கிறீர்களா? என அவர் காட்டிய சிறு அசைவுதான் இன்று தமிழ்நாட்டில் டாப் சப்ஜக்ட் என்கிறார் அவரது தீவிர ஆதரவாளர் ஒருவர்.
ஆகஸ்டு 15-ம் தேதி சிறு நெருப்பாக எழுந்தது. அதெல்லாம் ஒன்றுமில்லைங்க அணைத்துவிட்டோம் என்று சொன்னார்கள் மூத்த தலைகள். எரிமலை லேசாக புகையும்போது எல்லாம் அமைதியாகத்தான் தெரியும் என்று அப்போது யாருக்கும் தெரியாது. சமாதானம் பேச வந்தவர்கள் ஓ.பி.எஸ் பேசிய சில வார்த்தைகளில் ஆடித்தான் போனார்கள். மூச்சுப்பேச்சில்லை.
அடுத்த நாள் வழக்கம்போல் சென்னையின் மாசெக்கள் பகுதிகள் பட்டியலுடன் முதல்வரைப் பார்க்கப்போக போய் ஒருங்கிணைப்பாளரைப்பாருங்கள் என அவர் அனுப்ப, நம்ம அண்ணன் ஓ.பி.எஸ் தானேன்னு அலட்சியமாக வந்த அவர்களிடம் ஓ.பி.எஸ்ஸின் சிறு சீறல் தான் கட்சியில் டாப் டாபிக்காக உள்ளது. பகுதி பட்டியல் உள்ளது என மா.செக்கள் பட்டியலைக்கொடுக்க, அதை வாங்கி பார்த்து தூக்கி எரிந்த ஓ.பி.எஸ் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பியுள்ளார்.
கனிவாக இருக்கவும் தெரியும் அம்மாவைப்போல் கண்டிப்பாக இருக்கவும் தெரியும் என அவர் கண்டிப்பை காட்டியபோது முதன்முறையாக அம்மாவைப் பார்த்தது போல் அவர்கள் வயிற்றுக்குள் பந்து உருண்டிருக்கும். இப்பத்தான் உண்மையான தலைமையை பார்க்கிறோம் என்று எண்ணி அனைவரும் தலைக்குனிந்து நிற்க என்ன பார்க்கிறீர்கள் கட்சித்தலைமை யாரைப்போடணும்னு முடிவு பண்ணும் கிளம்புங்கன்னு அவர் சொல்ல தலைக்குனிந்து வெளியேறியதாக அங்குள்ள ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதே கண்டிப்பைத்தான் செயற்குழுவிலும் ஓ.பி.எஸ் காட்டியுள்ளார். அதுதான் ஓ.பி.எஸ்ஸின் ஒற்றை கையெழுத்து. நான் அம்மாவின் ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது என்றுத்தான் இத்தனை நாளும் பொறுமை காத்தேன். அதில் கை வைத்தால் இனி நான் யார், எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று காட்டுகிறேன் என்று அமைதியாக சொன்ன ஓ.பி.எஸ் இனி என் கையெழுத்தில்லாமல் கட்சியில் ஒரு அணுவும் அசையக்கூடாது என்றுச் சொல்ல பலர் முகத்தில் ஈயாடவில்லை.
மதிக்காத மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டுமல்ல, ஓ.பி.எஸ்சின் சிறு சீறல், லேசான உறுமல் கட்சியின் மொத்த அமைப்பையும் அசைத்துள்ளது. என்ன செய்வது ஏது செய்வதென்று தெரியாமல் ஆட்களை தூது அனுப்புவதும், வந்தவர்கள் அவர் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிப்போவதும், சிலருக்கு சந்திப்பே இல்லை என திருப்பி அனுப்பப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
எதையும் எதிர்கொண்டு அடிப்பது ஒருவகை, நின்று நிதானித்து உறியடிப்பதுபோல் மொத்தமாக அடிப்பது ஒரு வகை. ஓபிஎஸ் உறியடித்துள்ளார். அவர் குருடரல்ல. கண்ணைக்கட்டிக்கொண்டு அனைத்தையும் தம் அனுபவத்தால் அளந்தார் என்பதை லேட்டாக உணர்ந்துள்ளவர்கள் கலங்கி நிற்கின்றனர். இனி எது நடந்தாலும் அது ஓ.பி.எஸ்சை சுற்றியே நடக்கும் என பெருமையாக அங்குள்ளவர்கள் பேசுகின்றனர்.
ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் என்ன என்பதை ஓ.பி.எஸ் உணர்ந்து கையிலெடுத்துள்ளதால் அது இனி வரும் காலங்களில் கட்சியில் பலர் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஏன் தேர்தல் வேட்பாளர் தேர்வில், தேர்தல் கமிஷனுக்கு அளிக்கும் கடிதத்திலும் எதிரொலிக்கும் என்பதால் ஓ.பி.எஸ்சின் ஒற்றைக்கையெழுத்து பாலிசியால் எடப்பாடி உள்ளிட்ட பலரும் அதிர்ந்துத்தான் போயுள்ளனர்.
இனி கட்சியில் எது நடந்தாலும் ஓ.பி.எஸ்ஸின் ஒப்புதல் இல்லாமல் நடக்க முடியாது. அது ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ்சுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒற்றை கையெழுத்து எனும் அதிகாரம் தான்.
கட்டுரையாளர் :கிராம்சி




