எத்தனை தடங்கல்கள் வந்தாலும் வேல் யாத்திரை தொடரும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
வேல் யாத்திரை
வரும் 24-ம் தேதி நடைபெறும் வேல் யாத்திரையில் கர்நாடக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி கலந்துகொள்வார். டிச. 2 அன்று தேசிய இளைஞரணிச் செயலாளர் தேஜஸ்வி கன்னியாகுமரியில் கலந்துகொள்கிறார். தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி தென்காசியில் கலந்துகொள்கிறார்.
இறுதிக் கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அது இன்னும் முடிவாகவில்லை. ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும்.
தொடரும்
எத்தனை தடங்கல்கள் வந்தாலும் வேல் யாத்திரையை பா.ஜ.க. தொடரும். 10-ம் தேதி நடந்த சம்பவம் வருந்தத்தக்கது. சாலையில் செல்பவர்களையெல்லாம் கைது செய்தனர். இந்தக் கைது எதற்காக? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்வதாகச் சொல்கின்றனர். அதற்காகச் சாலையில் செல்பவர்களையும் கோயிலில் இருப்பவர்களையும் கைது செய்வார்களா? தமிழக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவ்வாறு அவர் கூறினார்.




