பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய பைக் மாடல்கள், எளிய மாதத் தவணையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசு கார்களை கடந்து பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது, சொகுசு பைக்குகளை வெளியிடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் என்ற இரு சொகுசு பைக் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட உள்ளன.
2020 பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 பைக்குகளுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டிற்கு முன்பாகவே இவை மாத தவணையில் கிடைக்கும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு மாடல்களுக்கான கடன் ஒப்புதல் வழிமுறைகள் இந்தியா முழுவதும் அனைத்து பிஎம்டபிள்யூ விற்பனையகம் மற்றும் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகையின் கீழ் பிஎம்டபிள்யூ மாடல்கள் வெறும் ரூ. 4500 என்ற மாத தவணையில் வழங்கப்பட உள்ளது.
பிஎம்டபிள்யூ 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்களின் விலை, தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையில், வெளியீட்டின் போது மட்டுமே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மாடல்களின் விலை தற்போதைய பிஎஸ்4 மாடல்களின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய மாடல்களில் மேம்பட்ட ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் பிஎஸ்6 ரக 313சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இதன் செயல்திறன் தற்போதைய பிஎஸ்4 மாடல்களை விட வேறுபடும் என கூறப்படுகிறது.