நடிகர் சூர்யாவின் புதிய படத்துக்கு புதிதாக ஒரு சிக்கல் முளைத்துள்ளதாக கோலிவுட் பட்சிகள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பிரமாண்டப் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குநரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை வரும் 30-ம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளதால், இந்திய விமானப்படை தரப்பிலிருந்து ஒப்புதல் கடிதம் வரவில்லையாம். அந்த கடிதம் வருவதற்காக தற்போது படக்குழு காத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அதனால்தான் தற்போது வரை படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை என்று கோலிவுட் பட்சிகள் தெரிவிக்கின்றன. இந்த சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்பட்டால் படத்தின் ரிலீஸ் நிச்சயம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.