தமிழில் மொழி, ராவணன் உள்ளிட்ட பெயர் சொல்லக்கூடிய பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிருத்விராஜ். இவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் ரசிகர்கள் உண்டு.
அதே போல் தமிழில் தல அஜித்குமார் உடன் விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் நடித்தவர் நடிகை அனிகாசுரேந்திரன், இவர்களுடன் உன்னி முகுந்தன் போன்ற மலையாள நடிகர்கள் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகள் தான் தற்போது பேசு பொருளாகி உள்ளது.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு (பேரியாறு) அணையின் உச்சபட்ச உயரம் 155 அடி. அதிகபட்ச கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும். தற்போது 142 அடிவரை அணையில் நீர் தேக்கி வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் மேற்கொண்டு வருகிறது.
125 ஆண்டுகள் மிகவும் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். கேரளா இரண்டாக பிளந்துவிடும் என, கேரள மாநில அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கேரளாவில் கடந்த நாட்களாக பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்தது.
இதனால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வைகை அணைக்கு நீரை திறந்துவிட கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணையை கைவிட வேண்டும் என மலையாள நடிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இவர்களில் நடிகர் பிருத்வி ராஜ், நடிகை அனிகா உள்ளிட்டோர் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.