பாலிவுட்டில் திரையுலகின் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார் அவர் தற்கொலை இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதன் பிறகு இந்தி திரையுலகம் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கியது.
இந்த விவகாரம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்(NCP) விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அவர்கள் ஏற்கனவே சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்டோரை கைது செய்தனர். தற்போது நடிகை ரியா சக்கரவர்த்தி ஜாமீனில் வெளியே வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள பிரபல இந்தி பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தயாரிப்பாளரின் மனைவி சபீனாவையும் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று அவர்கள் மும்பை பாந்திரா பகுதியில் உள்ள பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பாலின் , வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சில எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் நடிகரின் டிரைவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.பின்னர் இன்று ஆஜராகுமாறு நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு சம்மன் கொடுத்தனர்.இந்த விவகாரம் இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.