தனது பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் தரப்பில் அவரது சட்ட ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நான் திரு. அஜித் குமார் அவர்களின் அதிகாரபூர்வ சட்ட ஆலோசகர். எங்கள் கட்சிக்காரர் அஜித் குமார் சார்பாக கொடுக்கும் இந்த சட்ட அறிக்கையின்படி, சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரரின் சார்பாளராகவும், அல்லது அவரது பிரதிநிதி போலவும் என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலை படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்து உள்ளது.
இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் திரு சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
மேலும், தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை திரு. சுரேஷ் சந்திரா அவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.
இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்கு என் கட்சிக்காரர், எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொது மக்களும், இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார், எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.