குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும், அவசரமாக செல்லும்போது பெரியவர்களும் உணவுகளுடன் ஜாம் சேர்த்து சாப்பிடுவார்கள். இதுவரை கடைகளில் வாங்கி பயன்படுத்தியிருப்போம். அதிலே என்னென்ன கலந்திருக்கிறார்கள் என்று நமக்கு தெரியாது..இனி வீட்டிலேயே சுவையான தரமான ஜாம் வகைகள் செய்ய முடியும்.
மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்
- ஆப்பிள் – 5-6
- பப்பாளி – 1
- திராட்சை – 1 கிலோ
- வாழைப்பழம் – 3
- ஸ்ட்ராபெர்ரி – 8
- அன்னாசி – 1 (சிறியது)
- எலுமிச்சை சாறு – 1 1/2 டீஸ்பூன்
- சிட்ரிக் ஆசிட் – 6-7 டீஸ்பூன்
- சர்க்கரை – 1 கிலோ
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அன்னாசி மற்றும் பப்பாளியின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பின் ஆப்பிளை தோல் சீவாமல் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய அன்னாசி, பப்பாளி மற்றும் ஆப்பிள் பழங்களைப் போட்டு, 5-10 நிமிடம் வேக வைத்து, இறக்க வேண்டும்.
- பின்பு ஆப்பிளின் தோலை நீக்கிவிடவும். அடுத்து திராட்சையில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு மிக்ஸி/பிளெண்டரில் திராட்சை, எலுமிச்சை சாறு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் மற்றும் அன்னாசி சேர்த்து நன்கு கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள கூழ், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
- அடுத்து அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து 1-2 நிமிடம் அடுப்பில் வைத்து, கெட்டியானதும் இறக்க வேண்டும். அப்போது கலவையானது நீர்மமாக இல்லாமல் கெட்டியாக இருந்தால், ஜாம் ரெடியாகிவிட்டது என்று அர்த்தம்.
பின்னர் அதனை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின்பு அதனை குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்க வேண்டும்.
சுவையான ஜாம் தயார். இதனை பிரட் அல்லது சப்பாத்தியுடன் வைத்து நீண்ட நாட்கள் சாப்பிடலாம்.