சூர்யா நடிப்பில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2ம் தேதி வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஐந்து மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், குழந்தைகளின் படிப்பு முக்கியத்துவத்தையும் தத்ரூபமாக சித்தரித்திருக்கிறது.
இந்த படத்தைப் பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பல திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் இத்திரைப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை விமர்சித்து ஹெச்.ராஜா ட்வீட் செய்திருந்தார்.
அதில், ’’நம் குழந்தை 3 மொழி படிக்கக்கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்துகொள்வோம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, ஹெச். ராஜாவின் இந்த ட்வீட்டை நடிகர் சூர்யா லைக் செய்திருக்கிறார். ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவும் அதற்கு சூர்யா போட்ட லைக்கும் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.