சமூக சேவை அமைப்பு ஒன்றை தொடங்க இருப்பதாக நடிகை கீர்த்திஷெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கீர்த்திஷெட்டி. உப்பென்னா திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ்ரசிகர்களால் பெரிதும் அறியப்பட்டவர். ’கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்’ என்ற பாடல் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இந்நிலையில் சமூக சேவை அமைப்பு ஒன்றை தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கீர்த்திஷெட்டி தெரிவித்திருப்பதாவது:ஒரு வித்தியாசமான நடிகையாக ரசிகர்களிடம் அடையாளம் காணப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதனால்தான் உப்பென்னா தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்தேன். வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு புகலிடம் அவர்தான். விஜய்சேதுபதியுடன் நடித்ததாலோ என்னவோ தெரியவில்லை.
நான் நடித்த கமர்சியல் படங்கள் தொடர்ந்து திரைக்கு வந்தவண்ணம் உள்ளன. சூர்யா மற்றும் சுதிர்பாபுவுடன் நான் நடிக்கும் படங்கள் வித்தியாசமாக இருக்கும். ஒரு சமூக சேவை தொண்டுநிறுவன அமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என சிறுவயது முதலே எனக்கு ஆசை. விரைவில் இது சம்மந்தப்பட்ட பணியை ஆரம்பிக்கப் போகிறேன். எனது படங்களின் வெற்றி, தோல்வியை பற்றி எனக்கு கவலையில்லை. எல்லா படத்திலிருந்தும் கற்றுக்கொள்ள ஒரு படிப்பினை கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.