தெலுங்கு படத்தின் முன்னணி குணசித்திர நடிகர் மற்றும் அஜீத் நடிப்பில் வெளிவந்த ஆஞ்சேநேய, தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தம புத்திரன் ஆகிய படங்களில் நடித்தவருமான ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 73.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் காலை படுக்கையில் இருந்து எழுந்த அவர் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் குளியலறையிலிருந்து வெளியே வராத நிலையில் குடும்ப உறுப்பினர்கள் குளியலறை கதவை உடைத்து சென்று பார்த்தபோது, அவர் குளியல் அறையிலேயே மாரடைப்பு வந்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஜெய பிரகாஷ் ரெட்டி காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த நிலையில் மற்றும் நடிப்பு மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக நாடகங்களில் முதலில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சினிமா துறையில் கால்பதித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வில்லன்,காமெடி, குணசித்திர நடிகராகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் குண்டூரில் உள்ள தனது வீட்டில் திடீரென உயிரிழந்திருப்பது தெலுங்கு திரைப்படத் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இறந்த ஜெயபிரகாஷ் ரெட்டிக்கு தெலுங்கு திரைஉலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.