
தமிழ் திரை உலகினர் கடும் உழைப்பாளிகள் என்றும், ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையை தர வேண்டுமென்றும் ‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் யஷ் தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 13-ம் தேதி கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் திரைக்கு வருகிறது. இதற்கான விளம்பரப் பணிகள் சென்னையில் நடந்தது. முதல் பாகம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் படக்குழு அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். நடிகர்கள் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சரண், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோருடன் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய பட கதாநாயகன் யஷ், மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். அதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள் என்றார்.
மேலும், சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்து பிறகு நடிகர்களை அக்காட்சியில் நடிக்க வைப்பார். அவரது இந்த அணுகுமுறை அவருடைய தொழில் மீது அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை உணர்த்தியது என்று யஷ் கூறினார்.
அதற்காக நான் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக அன்பறிவு மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது என்று நடிகர் யஷ் விழாவில் பேசினார்.



