மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சால் இந்தி மொழி சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இலக்கியங்களில் ‘புரட்சிக் கவிஞர்’ என்கிற அடையாளத்துடன் கொண்டாடப்படுபவர் பாரதிதாசன். இவர் எழுதிய கவிதை தொகுப்பு தான் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’. இந்த வரிகளைச் சுட்டிக்காட்டி ஏ.ஆர். ரஹ்மான் தமிழணங்குடன் கூடிய போஸ்டரை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய என்கிற வகையில் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் புரட்சிக்கவிஞரின் வரிகள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அவருடைய கருத்து மாநில உரிமைகளை பேசும் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இந்தி மொழி பிரச்சினை எழுந்திருக்கும் இந்த சூழலில், ஏ.ஆர்.ரகுமான் சரியான கருத்தை தெரிவித்திருப்பதாக சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.