தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சித்ரா நேற்று நள்ளிரவு மாரைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
80களில் தமிழ் சினிமாவில் நடித்தவர் சித்ரா. இவர் இயக்குனர் கே.பாலச்சந்திரனின் ‘அவள் அப்படிதான்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஆவார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவராவார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சித்ரா, குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சென்னை சாலிகிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்
நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் இவர் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். விஜயராகவன் என்பவரை திருமணம் செய்த இவருக்கு மகாலட்சுமி என்ற மகள் உள்ளார். தமிழில் ராஜ பார்வை, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர் காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து சிறப்பான நடிப்பால் பேசப்பட்டவராவார். சித்ரா கடைசியாக 2020ம் ஆண்டு வெளியான “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் நடித்திருந்தார்.
சித்ராவுக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டிலே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்ராவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.