60களில் தொடங்கி தற்போது வரை நடிகர்களை கொண்டாடி மகிழ்ந்த திரையரங்கம் கடந்த 5 மாதங்களாக முடியுள்ள நிலையில் மீண்டும் திறக்கப்படவேண்டுமா? என மக்களிடம் டிவிட்டரில் கருத்துக்கேட்டுள்ளார் இயக்குனர் சேரன்.
கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கினால் பலதுறைகள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. மேலும் பலர் வேலைவாய்ப்பின்றி தவித்துவரும் நிலையில் எல்லா சூழ்நிலைகளிலும் மக்களை மகிழ்வித்து வந்த சினிமாத்துறையும் தற்போது களையிழந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தான் 5 மாதங்களாக முடங்கியுள்ள திரையரங்கு மற்றும் எதிர்கால திரையுலக பயணம் பற்றி கருத்தினை பதிவிட்டுள்ளார் இயக்குனர் சேரன்.
அதில், தமிழ் சினிமாத்துறையில் “சிவாஜி, எம் ஜி ஆர் என விசில் அடித்து படம் பார்த்த காலமும், ரஜினி கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாவிஷேகம் செய்து படம் பார்த்து வரும் அந்த திரையரங்க பிரமாண்டம் 5 மாதங்களாக முடங்கி கிடக்கிறது”. நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடி தீர்த்த மக்கள் கைபோனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்து பார்த்தபடி வியந்து கிடக்கிறார்கள். எதிர்கால திரையுலக பயணம் எந்த திசை என்று கணிக்க முடியாமல் குழம்பிக்கிடக்கிறது சினிமா இண்டஸ்ட்ரி. இதில் மக்களின் கருத்து என்ன?..அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா?. திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள் என இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.