‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அறிவித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. ‘தலைவி’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இத்திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரிலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ்ராஜ், சோபன்பாபு கேரக்டரில் ஜிஷ்ஷூ செங்குப்தா, சசிகலா கேரக்டரில் பூர்ணா, ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் மது, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கேரக்டரில் பாக்யஸ்ரீ, ஆர்.எம்.வீரப்பன் கேரக்டரில் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.