சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன், அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. விடுதலை இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளில் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த காட்சிகளை மீண்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், விடுதலை படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணிகள் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, மாதம் ஒரு முறை இயக்குநர் வெற்றிமாறன் லண்டன் சென்று வருவதாக கூறப்படுகிறது.