கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து, வில்கியதாக விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், ஈழப்போரின் போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, படத்தின் மோக்ஷன் போஸ்டர் வெளியானது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்ப, படத்தில் இருந்து விஜய் சேதுபதியை விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரனே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி..வணக்கம் என பதிவிட்டு இருந்தார்.
இந்த சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி இன்று சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு முதலமைச்சர் இல்லத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த செய்தியாளர்களை நடிகர் விஜய் சேதுபதி சந்தித்தார்.
அப்போது 800 பட விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘நன்றி… வணக்கம்… என்றால்
எல்லாம் முடிந்து விட்டது… இதை பற்றி பேசி இனி ஒன்றும் இல்லை’ என தெரிவித்து 800 படம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.