– ஆர். ஜெயசீலன்
பசி உச்சத்தில் இருக்கும்போது, வித விதமான உணவுகளை முன்னே வைத்து, இரு கைகளையும் கட்டிப்போட்டவன் மனநிலை எப்படி இருக்குமோ, அதுபோன்ற மனநிலையில், அந்த ஏ.டி.எம். அறையின் வெளியில், போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான், செக்யூரிட்டி கந்தவேல்.
“இன்னிக்காவது எப்படியாச்சும் இருமலுக்கு மருந்து வாங்கிட்டு வந்திடுங்க..” என்று உருக்கமான குரலில், ஆஸ்துமா நோயாளியான தன் மனைவி கூறிய வார்த்தைகள், மனதில் வந்து போயின. மருந்து வாங்க வேண்டுமென்றால், எப்படியும் இருநூறு ரூபாய் தேவைப்படும். கையில் இருப்பது நூறு ரூபாய்தான்… மீதம் நூறு ரூபாய் எப்படி புரட்டுவது என்பது தெரியாமல்தான் குழம்பிக் கொண்டிருந்தான், கந்தவேல். தெரிந்த நபர்களிடம் கைமாத்து கேட்டும். ஏமாற்றமே மிஞ்சியது.
என்ன செய்வதென்று புரியாமல், ஏதோ சிந்தனையில் அவன் மனது தவித்துக்கொண்டிருந்தது. மனம் முழுவதும் நூறு ரூபாயை எப்படி புரட்டுவது… யாரிடம் கேட்பது… என்ற எண்ணத்திலேயே அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஏ.டி.எம். இயந்திரத்தில் கத்தை கத்தையாக பணம் எடுத்துச்செல்லும் நபர்களை பார்த்தப்போது, மனதில் அவனுக்கு ஏக்கமும் தவிப்புமாக இருந்தது.
“இவ்வளவு பணத்த கொண்டு போய் என்ன செய்யப் போறானுங்க…. எவ்வளவு பணம் வெச்சாலும் எடுத்துக்கிட்டு போயிடுறானுங்க…”, என்று அவனின் ஏழ்மையின் இயலாமை, மற்றவர்கள் மீது பொறாமையாக வெளிப்பட்டது .
“பணம் எடுக்க வருபவர்கள் யாராவது ஏ.டி.எம். கார்டை தவறவிட்டு சென்றால், அதை எடுத்து வைத்துக் கொண்டு, திரும்பி வந்து அவர்கள் கேட்டால், ஏதாவது பணம் கேட்கலாமா… இல்லை, பணம் எடுப்பவர்களிடம் தன் நிலையைக் கூறி, கொஞ்சம் பணம் கேட்கலாமா… இல்லை, யாரவது தப்பித் தவறி பணத்தை தவற விட்டு சென்றால், அதை எடுத்துக் கொள்ளலாமா… என்று வாழ்க்கையின் வலி, அவனைப் பல வித அற்பத்தனமான விஷயங்களை, அசைப் போட வைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை
மனம் சோர்வடைந்து, அறையில் கிடந்த ஏதோ ஒரு பழைய செய்திதாளை கையில் வைத்துக்கொண்டு, மனமில்லாமல் படித்துக் கொண்டிருந்தான்.
அப்போது தான், வயதான கிழவி ஒருத்தி ஏ.டி.எம். அறை நோக்கி வருவதைக் கவணித்தவன், அவள் தோற்றத்தையும், அணிந்திருந்த ஆடையையும் பார்த்த கந்தவேல், “இந்தாம்மா, என்ன வேணும் உனக்கு..” என்று அலட்சியமாகக் கேட்டான்.
”தம்பி, என் பேரன் பட்டணத்துல இருந்து பணம் அனுப்பியிருக்குறதா சொன்னான்… அதான் பணம் வந்திருக்கான்னு பாரக்கணும்…. என்றாள். கந்தவேலுக்கு கோபமும், நக்கலும் மனதில் பிறந்தது.. “ம்… இந்த கிழவியெல்லாம் ஏ.டி.எம். கார்டு வச்சி பணம் எடுக்குது… நம்ம தலையெழுத்து, பொண்டாட்டிக்கு நூறு ரூபாய்-க்கு மருந்து வாங்க கூட காசில்லாத பொழப்பு…. என்ன பொழப்பு இது…” என்று மனதுக்கள் நினைத்துக்கொண்டே “என்னா வேலை பார்கிறான் உன் பேரன் என்று கிழவியிடம் கேட்டான்”.
“ஏதோ ஒரு ஓட்டல்ல.. வேலைப்பார்க்கிறதா.. சொன்னான்”
“ஏன், அவனுக்கு அப்பா அம்மா இல்லையா… உனக்கு அனுப்புறான்..” மனதில் பிறந்தப் பொறாமையோடு எரிச்சலாக கேட்டான், கந்தவேல்.
“இல்லப்பா, அவன் பொறந்ததும் அவன் ஆயி அப்பன் என்கிட்ட உட்டுட்டு, போய் சேர்ந்துட்டாங்க…. வளர்த்தப் பாசத்துக்கு, மாசா மாசம் தனியா இருக்கிற எனக்கு, ஆயிரம் ரூவா பணம் அனுப்புறான்..” என்று கண் கலங்கினாள்.
கந்தவேல் அதற்கு மேல ஏதும் போசாமல், அவள் கொடுத்த ஏ.டி.எம். கார்டை, அந்த இயந்திரத்தில் செலுத்தினான். அவன் கேட்பதற்கு முன்னதாகவே, அவள் ஒரு கசங்கிய தாளில் யாரோ எழுதித் தந்திருந்த ரகசிய நம்பரையும் அவனிடம் கொடுத்தாள். கார்டை இயந்திரத்தில் சொருகி பின்னைப் போட்டுப் பாரத்தான், பணம் ஏறியிருந்தது.
கிழவியைப் பாரத்தால் விபரம் இல்லாதவள் போல் உள்ளாள். பணம் ஏறலன்னு சொல்லி, அவள் அசந்த நேரம் பார்த்து பணத்தை எடுத்து விடலாமா… என்று அவன் மனதில் லேசான கிறுக்குப் புத்தி சுழன்றது. ஆனாலும், ஏதோ ஒன்று அவனை தடுத்தது.
“ஏம்பா பணம் ஏறியிருக்கா..” என்றாள் கிழவி.
ஆம் என்றோ… இல்லை என்றோ… சொல்ல முடியாமலே குழம்பினான் கந்தவேல். எப்படியோ ஒரு வழியாக, அரை மனதாக “ஏறியிருக்கு..” என்றவாறே, பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“கொஞ்சம் எண்ணிப்பாருப்பா…” என்றாள் கிழவி.
கிழவி இப்படி கூறியதும், “ஒரு வேளை கிழவி விபரமானவளாக இருப்போளோ…. நூறுரூபா பணத்தை எடுத்துக் கொண்டு கொடுத்தால், கண்டு பிடித்துவிடுவாளோ…” என்று லேசாக அவன் மனம் தயங்கியது. கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு, இதுதான் சமயம் என்று… எண்ணுவது போல் ஒரு நூறு ரூபாய் தாளை… அவளுக்கு தெரியாமல் கீழே போட்டான், கந்தவேல். நூறு ரூபாய் விழுந்ததை அவள் கவனிக்கவில்லை என்பதை தெரிந்துக் கொண்டு, அவளிடம் மீதமுள்ள தொள்ளாயிரம் ரூபாயை நீட்டினான்.
அவன் எண்ணிக் கொடுத்த பணத்தை, நம்பிக்கையோடு கையில் வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள், கிழவி.
அப்பாவித்தனமாக, தான் கொடுத்தப் பணத்தை என்ன எதுவென்று கூட கேட்காமல், வாங்கிக்கொண்டு நடந்துச் செல்லும் கிழவியைப் பாரத்தப்போது, கந்தவேலுக்கு மனசு லேசாக உறுத்தியது. நூறு ரூபாயை அவளிடம் கொடுத்து விடலாமா… சிந்தித்தக் கன நேரத்தில், காலையில் மனைவி “மருந்து வாங்கிக்கொண்டு வந்திடுங்க..” என்று கெஞ்சலாகக் கூறியது நினைவுக்கு வந்ததும், இருதலைக்கொள்ளி எறும்பாக அவன் மனநிலை மாறிப்போனது.
ஒரு வழியாக மனதை திடப்படுத்திக்கொண்ட கந்தவேல், ஒரு நொடியில் தான் செய்த செயலுக்காக வெட்கப்பட்டு, தெளிவடைந்து, அவளிடம் அபேஸ் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு, திரும்பிப் பாராக்காமல் சென்ற கிழவியை பின் தொடரந்து, அவள் அருகில் சென்று… “பாட்டி உன்னோட பணத்த நான் எண்ணினப்போ, இந்த நூறு ரூபா கீழே விழுந்துட்டுப்போல… நானும் கவனிக்கல… இந்தாம்மா..” என்று, அவளிடம் அவன் அபேஸ் செய்த நூறு ரூபாய் தாளை நீட்டினான்.
ஆனால் அவளோ சிரித்துக்கொண்டே “இந்த காலத்துல இப்படியா…. ஒன்னோட நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்கமாட்டாம்பா… இந்தப் பணத்த நீங்களே வச்சிக்கங்க தம்பி….” என்று சொல்லிவிட்டு, அவனிடமிருந்து பணத்தை வாங்காமல், அழுக்கு ஆடையோடு வேகமாக நடந்து சென்ற கிழவியை பார்த்துக்கொண்டிருந்த கந்தவேலுக்கு, தன் மனம் முழுவதும் அழுக்காக மாறியிருந்ததுக் கண்டு, வெட்கத்தில் கூனி குறுகிப்போனான்….
– கதைப் படிக்கலாம் – 22
இதையும் படியுங்கள் : தேடல்