– செ. செந்தில்மோகன்

மோகன் வீட்டிற்குள் நுழைந்ததும்.. “பசியோடு இருப்பாரே”.. என்று வேகமாக சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள், நந்தினி.
மோகனோ பால்கனி பக்கம் நின்றுக்கொண்டு.. ஃபோனை கையில் வைத்துக்கொண்டு, “பவ்யமாக வளைந்து நெளிந்து சார்…சார்…” எனப் பயந்து ஒடுங்கி, குரலே வராமல் பேசிக்கொண்டு இருந்தான்.
அப்பா வந்துட்டாரென்று ஆசையுடன் அருகில் ஓடி வந்த மோகனின் மகன் தர்ஷன்..
அப்பாவின் செயலைக்கண்டு, முதன்முறையாக அதிர்ச்சியில் அப்பாவையே ஒருவித ஆச்சரியம் கலந்த.. ‘ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.’
மோகன் இதற்கு முன்பு ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில், வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் மகன் தர்ஷன், பாலக பருவம்.
அப்பா ஆபீஸில் இருந்து வருவதை, தூரத்தில் கேட்கும் பைக்கின் சத்தத்தை வைத்தே.. பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவிடம், அப்பா வந்துட்டார்மா என்பான்!
அவன் அம்மா ஆச்சரியமாக பார்ப்பாள் அவனை!
கணவர் உள்ளே வருவதை பார்த்ததும்.. தர்ஷனிடம் கேட்பாள்.. எப்படிடா கண்டுபிடிச்ச..
எத்தனை வண்டிகள் போகுது.. ஆனா உங்க வண்டி சத்தத்தை மட்டும்..
தெரு முனையில் வரும்போதே கண்டுபிடித்துவிடுகிறானே! என்பாள்.
அவ்வளவுதான், தனது மழலையில் கொய்முய்.. கொய்முய்யென அப்பாவிடம் பேச ஆரம்பித்துவிடுவான் தர்ஷன்.
அப்போதிருந்தே அவன் அப்பா செய்யும் ஒவ்வொன்றையும் கவனிப்பான்.
விளையாடிக்கொண்டுதானே இருக்கிறான் என்றுதான் நினைப்பார்கள் இருவரும். ஆனால் தர்ஷன் அவன் அம்மாவிடம்..
அன்னிக்கு… இப்பிடிதாம்மா… என ஏதாவது ஒரு நிகழ்வை.. அவன், அப்பா போட்டிருந்த டிரெஸ்ஸோடு நினைவுக்கூர்ந்து சொல்லும்போதே.. இருவரும் ஆச்சரியம் தாளாமல் பார்ப்பார்கள்.
இப்பொழுதுக்கூட அவன் அம்மா ஏதாவது தவறாக செய்துவிட்டால்,
அவன் அப்பாவைப் போலவே திட்டுவான்.
அவன் அம்மாதான் முனகுவாள்.. ம்க்கும்.. பிள்ளையப்பாரு.. அவுங்க அப்பா மாதிரியே…சல்லு.. சல்லுனு.. எனத் தன் கணவன் காதிற்கு கேட்கும்படி!
தன் மகன், கணவனைப்போல இருப்பதில் உள்ளூர.. பெருமையாக இருந்தாலும், பொய்யாய் கோபம் காட்டிக்கொள்வாள்.
அப்போதெல்லாம் மோகன் வீட்டிற்கு வந்தவுடன்.. குளித்துவிட்டு வருவதற்குள், பத்து தடவையாவது பாத்ரூம் கதவை பார்த்துவிட்டு ஓடிவருவான், தர்ஷன்.
அப்பாவுடன் விளையாட ஆவலாய் இருப்பான். “தன் மகனோடு சேர்ந்து, தானும் தன் மனைவிக்கு மகனாகிப்போவான்”.. மோகன்!
அது ஒரு காலம்!, ஒவ்வொரு சனிக்கிழமையும் வீடு முழுவதும்.. சந்தோஷம் நிரம்பி வழியும்.
ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு சினிமா அல்லது ஹோட்டலுக்கு.. என தர்ஷனுக்காகவே கிளம்பிவிடுவார்கள்.
திடீரென ஒரு நாள் மோகனுக்கு விபத்து ஏற்பட… நந்தினிக்கு இந்த ஊரில் தெற்கு வடக்கு தெரியாதே..
நம்மை எப்படி இங்கே வைத்து தனியாக அலைந்து திரிந்து.. வைத்தியம் பார்ப்பாள் என கலங்கிப்போனான்.. மோகன்.
பிறகுதான் முடிவெடுத்தான்.. நாம் திருச்சிக்கே போய் சிகிச்சை எடுப்போம். அங்கே உன் அம்மா, அப்பா உனக்குத் துணையாக இருப்பார்கள் என்றான்.
அந்த மூன்று மாதங்கள்.. தமது பிள்ளையின் படிப்பு தடைபட்டதும்தான்.. யோசிக்கலானான்.
வேண்டாம்.. இனிமேல் பிள்ளைகளை நாம் சிரமப்படுத்தக்கூடாது..
அடுத்த வருடத்திலிருந்து குடும்பத்தை சொந்த ஊரான திருச்சிக்கே மாற்றுவதென்று.
ஒரு வழியாக குடும்பத்தை திருச்சிக்கு மாற்றி.. தர்ஷனையும் அங்கே ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு.. தான் மட்டும் வெளியூரிலேயே தங்கி வேலை பார்த்துவந்தான்.
பிள்ளையை ரொம்பவே மிஸ் பண்ணினான்.
எப்போதாவது லீவில் போனால், பிள்ளை ஏக்கமாக பார்ப்பான். இவனுக்கும் மனதை பிசைவது போலிருக்கும்.
காலம் உருண்டோடியது.. தர்ஷனும் உயர்நிலை வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றிருந்த சமயம்.. பிள்ளை பத்தாம் வகுப்பு போகிறானே… அருகில் இருந்தால் நல்லது என்று எண்ணி,
அந்த வேலையில் இடமாற்றம் கிடைக்காததால் ராஜினாமா செய்துவிட்டு.. தற்போதுதான் இந்நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்.
இது சிறிய நிறுவனம்தான் என்றாலும்.. உள்ளூரிலேயே இருக்கலாம்.
மகனும், அப்பா உடனிருந்தால் சந்தோஷப்படுவான்தானே..
என எண்ணியே.. இந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தான்.
முதலாளி கறாரானவர். சிடு சிடுவென்றுதான் இருப்பார். காலம் தவறாமையில் இருந்து, லாப நஷ்டம் வரைக்கும், ஒன்று விடாமல் கடைபிடிப்பார்.
நல்லது… அப்படி இருந்தால்தான் நிறுவனத்தை திறம்பட வழி நடத்த முடியும் என்பதில், மோகனுக்கும் சந்தேகமில்லை.
ஆனால், எதுவுமே ஒரு எல்லை வரைக்கும்தான்.
சுய ஒழுக்கம், மரியாதை, கடமை உணர்ச்சி இதில் எதிலும் மோகன் விட்டுக்கொடுப்பவனில்லை.
ஆனால் சுய மரியாதையை சுரண்டிப்பார்த்தால் விஸ்வரூபம் எடுத்து விடுவான்.
அப்பேற்பட்டவன் பால்கனியில் நின்று வளைந்து, நெளிவதைப் பார்த்தவுடன்தான்.. அவன் மகன் தர்ஷனுக்குள் ஏதோ பண்ணியது..
‘நம்ம அப்பாவா இப்படி பேசுகிறார் என்று..’
ஒரே மகன்..சிறு வயது முதலே அப்பாதான் உலகம்.. அப்பாதான் ஒரே ஹீரோ!
அப்பாவுடன் விளையாடும் நேரங்களில் சிரித்துக்கொண்டேதான் விளையாடுவான். விளையாட்டு என்பதைவிட, அப்பாக்கூட விளையாடுகிறோம் என்ற சந்தோஷம்தான், அவனையறியாமலே சிரிக்கவைக்கும்.
அவன்தான் கேட்டான் அப்பா ஃபோனை வைத்ததும்… யாருப்பா ஃபோனில் என்று!
சட்டென சுயநினைவிற்கு வந்தது போல மோகன்.. ம்.. ம்.. அதுவா.. எங்க எம்.டி-ப்பா என்றான்.
உடனே தர்ஷன் அதுக்கு ஏம்ப்பா இப்படி பயப்படுற… நார்மலா பேசவேண்டியது தானே என்றான்.
மோகன் முதன் முதலாய் கில்டியாக உணர்ந்தான்..
அடடா… நம்மப் பிள்ளை இவ்வளவு நாளா நம்மளப்பத்தி எவ்வளவு பெருமையா நினைச்சுகிட்டு இருந்திருப்பான்.
இப்ப அவன் முகத்தில் ஏதோ ஒரு ஏமாற்றமும், வருத்தமும் தெரிகிறதே.. என சங்கடப்பட்டுக்கொண்டே.. வாப்பா சாப்பிடலாம் என மகனை அழைத்தான்.
சாப்பிடும்பொழுது அவன் மனைவிதான் சொன்னாள்.
ஏங்க, நாம கோவையில் இருந்தப்பதாங்க, நீங்க வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வரும்போது.. ‘சாந்தமா.. டென்சன் இல்லாம நார்மலா வருவீங்க’.
தர்ஷன்கூட நல்லா பேசி விளையாடுவீங்க..
இப்பல்லாம் உங்க ஸ்டைலே மாறிப்போச்சு.. என்றாள்.
அப்பொழுதுதான் மோகன் சொன்னான்.. இல்ல நந்தினி.. நான் சாப்பிட கிளம்பி சரியா காவிரி பாலத்துக்கிட்ட பைக்ல வரும்போது… ஃபோன் அடித்தது..
ஒரே ட்ராஃபிக். அதனால ஃபோனை எடுக்கலை, வீட்ல போயி பேசிக்கலாம்னு வந்துட்டேன்.
இங்க வந்து பாத்தா, அது என் எம்.டி-ன் கால். நான் கூப்பிட்டதும், ஃபோனை எடுத்து கோபமா பேச ஆரம்பிச்சுட்டார்.. என்னைப் பேசவே விடலை.
கோபமா பேசலாம் தப்பில்லை, ஆனால் யாரோ மூன்றாம் தர ஆளிடம் பேசுவது போல..
யோவ்.. நீயென்ன அவ்ளோ பெரிய ஆளா? கூப்பிட்டா ஃபோனை எடுக்கமாட்டியோ? இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்-ங்கிற ரீதியில பேச ஆரம்பிச்சுட்டார்.
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
பழைய கம்பெனில பெரிய பெரிய சீனியர்கள் கூட எவ்வளவு மரியாதையா நடத்துவாங்க தெரியுமா..
இங்க இருக்கிற சீனியர் ராஜேஷ்தான் இதுக்கெல்லாம் காரணம் நந்தினி..
நடு ரோட்ல நிக்கிறப்போ எம்.டி.கிட்ட இருந்து ஃபோன் வந்துட்டா போதும்.. அப்பிடியே பாம்பு மாதிரி வளைந்து நெளிந்து டான்ஸ் ஆடுவாரு.. தெருவே வேடிக்கைப் பார்க்கும்.
ஒரு நாள் இப்படித்தான், எங்கள் கிளைத் திறப்பு விழாவிற்கு,
அழைப்பிதழ் டிசைன் பண்ணுவதற்காக ராஜேஷுடன் போயிருந்தேன்.
அந்தக் கம்பெனியின் பார்ட்னருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, எங்க எம்.டி கிட்டேயிருந்து ஃபோன் வந்துருச்சு.. படக்குனு எந்திரிச்சு சார்… சார்… சொல்லுங்க சார்-னு, நடு ஆபீஸ்ல ஆட ஆரம்பிச்சுட்டார்.
அங்க வேலை பார்க்குற எல்லாரும் பார்த்து, நமட்டு சிரிப்பு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இந்த மாதிரி இவர்கூட சேர்ந்துதான், இந்த வியாதி எனக்கும் பரவுதோனு பயமா இருக்கு..
எங்க எம்.டி-யும் இதைத்தான் விரும்புவார்.
பயம் இருந்துக்கொண்டே இருந்தால்தான் வேலை செய்வார்கள் என்பது அவருடைய எண்ணம் என்றான் மோகன்.
தர்ஷன் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டான்.
அவனுடைய மனதில் மிகப்பெரிய ஏமாற்றம் ஒன்று வியாபித்திருப்பதை, மோகனால் உணர முடிந்தது.
மனதிற்குள் லேசான வலி பரவியது..
வேறு வழியில்லை… நாய் வேஷம் போட்டாச்சு.. குரைத்துதான் ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டே.. யூனிஃபார்மை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
ஒரு நாள் மதியப்பொழுதில், தன் நிறுவனத்தின் புதிய கிளையின் கட்டிட வேலை மேற்பார்வையில் இருந்தபொழுது, எம்.டி. காரில் வந்து இறங்கினார்.
மோகனுடன் பேசிக்கொண்டிருந்த அந்த இடத்தின் ஓனர்தான், எம்.டி-யைப் பார்த்ததும், வணக்கம் சார் வாங்க.. என்றார்.
மோகனும், வணக்கம் சார் என்றான்.
திரும்பிக்கூட பார்க்காத எம்.டி., நேராக இடத்தின் ஓனரைப் பார்த்து கைகூப்பி வணக்கம்.. வணக்கம் எப்படி இருக்கீங்க எனக் கேட்டுக்கொண்டே.. நான்கடி தூரம் தள்ளிப்போய் நின்றபடி பேச ஆரம்பித்தார்.
மோகன் தனது கடமையை செய்தபடி தள்ளி நின்றுக்கொண்டிருந்தான்.
அப்போது கிராமத்து ஆள் போல தோற்றமளித்த பெரியவர் ஒருவர்,
மெதுவாக நெருங்கி எம்.டி-யிடம் ஏதோ ஆஸ்பத்திரிக்கு வழி கேட்க..
அந்த இடத்தின் ஓனர், நேராக போய் வலதுபுறம் திரும்புங்க என சொல்லும்பொழுதே..
எம்.டி,.. மோகன் பக்கம் திரும்பி, ஏ… வா.. இங்க, இவர கூட்டிட்டு போயி விட்டுட்டு வா என்றார்.. ஏதோ நாயை ஏவுவது போல.!
மோகன் நொறுங்கிவிட்டான்.
எம்.பி.ஏ. படித்து… உழைத்து… பதவி உயர்வு பெற்று… இந்த நிலைக்கு வந்தும், பிரயோஜனமில்லாமல் போய்விட்டதே.. இப்படி அடிமை வேலை பார்க்கவா நேர்ந்துவிடப்பட்டோம்!
சுற்றி இருந்தவர்கள் நாளை நம்மை எப்படி மதிப்பார்கள்?, இந்த இடத்தின் ஓனர்தான் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்?
அவன் வேகமாக பைக்கில் அந்த நபரை ஏற்றிக்கொண்டு போகும்பொழுது.. மனதிற்குள் இவ்வளவு கேள்விகளும் போட்டி போட்டுக்கொண்டு கொப்பளிக்கின்றன.
மாலைச்சூரியன் சுள்ளென்று முகத்தில் அறைந்தது.
மூன்று நிமிடத்தில் திரும்பிய மோகன் அதே இடத்தில் நின்றான் தீர்மானமாக!
மோகன் பார்த்துக்க.. நான் கிளம்பறேன் எனக்கூறிய எம்.டி-யிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டு,
அவர் போனதும் நேராக டீக்கடைக்கு சென்று.. முதன்முறையாக “நிதானமாக” ஒரு டீ சாப்பிட்டான்… ஏதோ ஒரு முடிவோடு!
மோகன் உள்ளே நுழைந்த ஸ்டைலும், அவன் டவலை எடுத்துக்கொண்டே.. “அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு.. தினம் அச்சப்பட்ட கோழைக்கு உள்ளம் எதற்கு…” என பாடியபடி, கையை ஆட்டிக்கொண்டே குளிக்கப்போனதும்.. வித்தியாசமாகப்பட்டது அவன் மனைவிக்கு.
மகனைப் பார்த்தாள்.. அவனும் அம்மாவைப் பார்த்து, உதட்டை பிதுக்கியவாறு.. தோளைக் குலுக்கினான்.
வெளியே வந்த மோகன் மனைவியைப் பார்த்து.. “மேடம், சூடா ஒரு கப் காஃபி கிடைக்குமா ப்ளீஸ்..” என்றான்.
“ம்ம்.. என்னடா இது.. இந்த மேடத்துக்கு வந்த சோதனை”ன்னு..
மனசுக்குள்ளேயே கணக்கு போட்டுக்கொண்டே அடுப்படிக்குள் புகுந்தாள் நந்தினி!
காபியை கொடுத்துவிட்டு, என்ன? ஐயா இன்னிக்கு ஜாலி மூடில் இருக்காரு.. என்றாள்.
உடனே, இனிமே எல்லாம் அப்படித்தான் என்றான்.
அவளுக்கு லேசாக பயம் தொற்றிக்கொண்டது.. வேலையை ஏதும் விட்டுட்டு வந்துட்டாரோ.. என்று.
அவனே சொல்லட்டும் என்று.. அமைதியாக அவன் முகத்தையே பார்த்தாள்.
அவன்தான் சொன்னான்..
நந்தினி, அடுத்த வாரத்திலிருந்து நிலைமையே மாறப்போகுது..
இனிமே யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்றான்.
அவளுக்கு உதறலெடுத்தது.. போச்சுடா.. வேலையைத்தான் விட்டுட்டாரு போலிருக்கு.. என கலவரப்பட்டாள்.
என் நண்பன் ரவி… திருப்பூர்ல இருக்கானே.. அவன் எனக்கு உதவி செய்றதா சொல்லிருக்கான்..
வேலை விசயமா அவங்கிட்ட பேசினேன், ஒன்னும் கவலை வேண்டாம்.. எனது கம்பெனியிலேயே புது ப்ராஜக்ட் ஒன்னு ஆரம்பிச்சிருக்கோம்.. நீ சரியான நேரத்துலதான் பேசியிருக்க..
நான் பார்த்துக்கறேன்னுட்டான்.. என்றவுடனே,
“வேலையை விட்டுட்டீங்களா என்றாள்..” அதற்கு மேல் பொறுமையில்லாமல்…
ஆமாம் நந்தினி, கொஞ்சம் பொறுமையாயிரு.. நான் அவனிடம் எல்லாம் பேசிட்டு.. நல்ல விசயமா சொல்றேன்.. என முற்றுப்புள்ளி வைத்தான்.
சரி.. இதற்கு மேல் பேசினால் ‘சுள்ளென’ கோபம் வந்துரும் இவருக்கு..
என நினைத்துக்கொண்டே எழுந்து போய்விட்டாள்.
அம்மாவுடன் கடைக்குள் நுழைந்த தர்ஷன்.. அப்பா ரோலிங் சேரில் அமர்ந்தபடி, யாரிடமோ ஃபோனில்..
யெஸ்.. ஐயாம் மோகன்… ஃப்ரம் வெல் ஃபிட் கார்மெண்ட்ஸ் என்று..
ஸ்டைலாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும்..
“தொலைந்துப் போன தந்தை கிடைத்ததுப் போல”.. அவன் மனம் உணர,
பெருமையோடு அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான்!…
– கதைப் படிக்கலாம் – 29
இதையும் படியுங்கள் : தாய்மையில் கனியும் இறைமை




