கஞ்சாவை துளசியுடன் ஒப்பிட்ட விவகாரத்தில், மருத்துவ இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டுதான் சொன்னேன் என்று கூறியுள்ளார் நடிகை நிவேதிதா.
கிஷோர் நடித்த போர்க்களம், அபிஷேக் இயக்கிய கதை, ஃபெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2 உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் நிவேதிதா. போதை மாத்திரைகளை பயன்படுத்திய விவகாரத்தில், நடிகை ராகிணி திவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுபற்றி கருத்துக் கூறிய நடிகை நிவேதிதா, கஞ்சா மருத்துவக் குணம் நிறைந்தது என்றும் அதைச் சட்டப் பூர்வமாக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஏற்கனவே போதைப் பொருள் குறித்த வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நடிகை நிவேதிகா இப்படி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சா பற்றி அவர் கூறும்போது, ‘தடை செய்யப்படுவதற்கு முன், பல்வேறு சிகிச்சைகளுக்கு கஞ்சாவைப் பயன்படுத்தி வந்தனர். கஞ்சாவை தடை செய்ததற்குப் பின்னால் சதி இருக்கிறது. சுமார் 40 நாடுகளில் இதைப் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர் ‘ என்று தெரிவித்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலர் அவரை சரமாரியாக விளாசினர். கஞ்சாவுடன் புனிதமான துளசியை எப்படி ஒப்பிடலாம் என்றும் இதன் மூலம் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகவும் கூறி, மல்லேஸ்வரத்தை சேர்ந்த தீபக் என்பவர் போலீசில் நிவேதிதா மீது புகார் கொடுத்தார்.
இந்நிலையில் தான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று நடிகை நிவேதிதா கூறியுள்ளார். ‘எனது டிவி பேட்டியில் சில பகுதிகளை மட்டுமே வெட்டி சமூக வலை தளங்களில் ஒளிபரப்பியதால் வந்த பிரச்னை அது. போலீசார் இந்த விவகாரம் குறித்து என்னிடம் விசாரித்தனர். நான் விளக்கினேன்.
எனது கருத்து, பண்டை கால இலக்கியங்களில் உள்ள ஆன்மீக ஆவணங்கள் மற்றும் மருத்துவ இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதால், என் நிலைப்பாட்டை ஆதாரத்துடன் விளக்கினேன் என்றார் நிவேதிதா.