– சரவண முனீஸ்
என் நண்பனுக்கு விபத்தாகி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என்ற செய்தி கேட்டு, திடுக்கிட்டு அவனைப் பார்க்க ஆயத்தமானேன். என்னோடு பணியாற்றி, பின்பு வேறு இடத்திற்கு பணியமர்த்தப்பட்டவன். என் மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு பயணமானேன். ஒன்றரை மணி நேர பயணம், அவனைச் சேர்த்திருந்த மருத்துவமனையை அடைந்துவிட்டேன்.
அது பெரிய மருத்துவமனை என்பதற்கேற்ப, தனது உடலை அதிக பரப்பளவில் பரப்பி செழுமையாக நின்று கொண்டிருந்தது. கட்டிடத்தின் முகப்பில் ‘சோழன் மருத்துவமனை’ என்று நீல நிற பரப்பில், வெள்ளை நிறத்தில் எழுதியிருந்தது.
மருத்துவமனைக்குள் சென்று, எனது நண்பன் இருக்கும் அறையை விசாரித்துவிட்டு படிகளில் ஏறினேன். இரண்டாம் தளத்தில் இருந்தது, அவனது அறை. கதவைத் திறந்து உள்ளேச் சென்றால்… எனக்குள் ஓர் அதிர்ச்சி. சிறிய விபத்தாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவனுக்கோ கைகளிலும், கால்களிலும் கட்டுகள் அணிவித்து தொங்க விட்டிருந்தார்கள். அவனருகே அவன் மனைவியும் இருந்தாள்.
“டே, சுசி என்னாச்சுடா..?”- என்றவாறே அவன் அருகில் வந்தேன். அவன் ஏதோ கூற வருவதற்குள், அவள் முந்திவிட்டாள்.
“வா அண்ணா.. அது ஏன் கேக்குறீங்க..? எத்தனை தடவை சொன்னாலும் இவருக்குப் புத்தி வர மாட்டேங்குது..? பட்டாதான் ஒரு மனுசன் திருந்துவான்னா, அவன் பட்டுத்தான் திருந்தனும். நம்ம சொல்றதுக்கு ஒன்னு இல்லண்ணா..”- சொல்லிவிட்டு ஆரஞ்சு பழத்தைக் கசக்கி, அதன் சாறை சேகரித்துக் கொண்டிருந்தாள். பிறகு, நான் வாங்கிய ஆப்பிள்களையும், ஆரஞ்சுகளையும் அவளிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு அவன் முன் வந்து உட்கார்ந்தேன்.
“என்னடா மச்சி பண்ணே.. கட்டோட சைஸ்சு ரொம்ப பெரிசா இருக்கு..?” என்றேன்.
“அட நீ வேற ஒன்னுடா… ஃபோன் பேசிட்டு இருந்தவனுக்கு எதிர்த்தாப்புல வர லாரியைக் கண்ணுக்குத் தெரியல. அந்த லாரி ட்ரைவரும் ஃபுல் மப்புல வண்டிய ஓட்டிருக்கான். வேகமா வந்து இடிச்சான், அப்புறம் என்ன நடந்தது..? யாரு வந்து ஆஸ்பத்திரியில சேர்த்தா..? எதுவும் தெரியல. நல்ல நேரம், உசுருக்கு ஒன்னும் ஆகல..”
“கடவுள்தான் உன்னை காப்பாத்திருக்காருன்னு சொல்லு..” என்றேன். அவனும் அதற்கு இசைவுக் கொடுக்க, சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு கிளம்பினேன். படிகளில் இறங்கும்போதுதான் சாவித்திரி அம்மாளைப் பார்த்தேன். அவளது கையில் கூடையுடனும், முகத்தில் ஒருவகை வெறுப்புடனும் நடந்துப் போனாள். எனக்கு அவளின் பெயர் மட்டுமே ஞாபகம் இருந்தது. அவள் யாரென்று ஞாபகமில்லை. எங்கேயோ பார்த்த முகம், நன்கு யோசனை செய்த பிறகுதான், இவள் சாரதாவின் தாயார் என்று நினைவுக்கு வந்தது. உடனே, அவள் வெளிவந்த அறையின் வாயிலுக்குச் சென்று, உள்ளே எட்டிப் பார்த்தேன். எனக்கும் எதிர்புறமாக ஒருத்தி படுக்கையில் படுத்திருந்தாள். சிறிய தொட்டில் ஒன்று அவளது அருகில் இருந்தது. அதில் கைகளை ஆட்டியவாறே குழந்தை ஒன்று.
என் மனதிற்குள் சில கேள்விகள் எழுந்தன. யார் இந்த பெண்..? இவளுக்கும் சாவித்திரி அம்மாளுக்கும் என்ன சம்பந்தம்..? ஒருவேளை சாரதாவாக இருப்பாளோ, குழந்தை வேறு இருக்கிறதே.. என்று நினைத்துக் கொண்டிருக்க, அவளும் அதற்கு தகுந்தவாறு என் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள். நானும் அவளைப் பார்த்தேன். நன்கு பழகிய உணர்வு ஏற்பட்டது. சிறுவயதில் என்னோடு விளையாடிய முகம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை, அவள் சாரதா தான்.
இது என்ன விந்தை..? நண்பனைப் பார்க்க வந்தவனுக்கு, சிறுவயது நண்பியைப் பார்த்துவிட்டேனே.. -நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன்.
“சாரதா.. சாரதா..” என்றேன்.
“ம்..” என்று முனங்கியவாறே என்னைப் பார்த்தாள். இப்போதுதான் நான் அவளை முழுமையாக பார்த்தேன். அவளது முகம் நிறைய மாற்றங்களைக் கண்டு இருந்தது. விழிகளில் எந்தவொரு ஒளியும் இல்லை. அழுது இருக்கிறாள் என்பதை அவளின் சிவந்தக் கண்கள் காட்டிக் கொடுத்தன. அழகு கறுப்பு. கூரிய புருவங்கள் அதில் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் மயிர்கள் அணிவகுத்து நின்றன. அவளது வயது இருபத்தி ஐந்திலிருந்து முப்பதிற்குள் தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அதற்கு எந்த அடையாளமுமின்றி கன்னங்கள் வற்றியிருந்தன. அவளது உடல் இளைத்திருந்தது, முழு இளமையும் மறைக்கப்பட்டு இருந்தது. என்னைப் பார்த்ததும் எழுந்துக் கொண்டாள். என்னை யாரென்று கண்டுகொண்டு விட்டாள் என்று நினைத்தேன்.
“நீங்க சாரதா தானே…” என்று கேட்டேன். அதை உண்மை என்பது போல, தலையசைத்தாள்.
“என்னை யாருன்னு தெரியுதா சாரதா..?” இம்முறையும் தலையசைத்தாள். ஆனால், அது தெரியவில்லை என்ற பதிலில் இருந்தது.
“என்னை தெரியலையா! நான்தான் சரவணன். சின்ன வயசுல நீ, நான், நம்ம பெட்டிக்கடை செல்வம், மூக்கு ஒழுகி சந்தியா, காக்கா குமாரு எல்லாம் சேர்ந்து விளையாடுவோமே.. எங்க மேல் வீட்டுக்கு வாடகைக்கு வந்தீங்க. உங்க அப்பா ஏதோ ஃபைனான்ஸ் நடத்தினாரே.. ஏதாவது ஞாபகம் இருக்கா..?” என்றேன். அவளது புருவங்கள் சற்று உயர்ந்தன. பற்கள் தெரியாமல் மெல்லிய புன்முறுவல் பூத்தாள்.
“ஆமாம், இப்போதுதான் ஞாபகம் வருது. இருபது வருஷம் ஆயிடுச்சு. இன்னும் என் முகம் உனக்கு மறக்காமே இருக்கே.. எனக்குத் தான் எந்த ஞாபகமும் இல்லை. ஏன் இப்படி நின்னுக்கிட்டு இருக்கே..? அந்த நாற்காலியை எடுத்துப் போட்டு உட்காரு”. நானும் அவள் கூறியவாறே உட்கார்ந்தேன்.
“அப்புறம் நீ எப்படி இருக்கே..? வீட்டுல அப்புச்சி, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க..?
“எல்லாம் நல்லா இருக்காங்க. நீ எப்படி இருக்கே..? உங்க அப்பா எப்படி இருக்காரு..? ஆளே ரொம்ப மாறிட்ட..”
“நானா, ஏதோ இருக்கேன். எங்க அப்பா செத்துப் போயி அஞ்சு வருஷமாச்சு, எந்நேரமும் குடிச்சுக்கிட்டே இருப்பாரு. அப்புறம் எப்படி புழைப்பாரு..? அவர் மட்டும் இப்போ இருந்திருந்தா, நான் ஏன் இந்த நிலைமைக்கு வர போறேன்.” என்று கூறி முடித்தாள். அவளின் பேச்சில் பல சொல்லப்படாத ரணங்கள் இருப்பதாகவே எனக்குள் தோன்றியது. பிறகு, அருகில் கிடக்கும் தொட்டிலைக் கவனித்தேன்.
“சாரதா, இது உன் குழந்தையா..?”
“ம்.. என் குழந்தைதான். என் சாவ கொஞ்சம் தள்ளி போட்டுருக்கு. நீ எப்படி இருக்கேன்னு கேட்டியே..? அதுக்கு என்ன பதில் சொல்லனும்-னு தெரியாமே நொந்துட்டுருக்கேன். “பின்பு ஏக்கப் பெருமூச்சை விட்டு, பேசத் தொடர்ந்தாள்.
“சரவணா, உனக்கு விதி மேலெல்லாம் நம்பிக்கை இருக்கா..”
“ம்.. இருக்கே” என்று கூறினேன். “அந்த விதிதான் எல்லாத்துக்கும் காரணம். என் வாழ்க்கையை அழிச்சு, நடுத்தெருவுல நிக்கவுட்டுருக்கு.”, கூறியவாறே தொட்டிலில் கிடந்த குழந்தையை எடுத்து, தன் மடியின்மேல் வைத்தாள். அது ஆண் குழந்தை என்று அதன் பிறப்புறுப்பைப் பார்த்ததும் தெரிந்தது. அவனது கண்களைப் பார்த்தவாறே அவளது விழிகள் இருந்தன. குழந்தையின் விழிகள் ஆச்சரியத்தில் நிறைந்திருந்தன. புதிய இடத்திற்கு வந்துவிட்டது போல், அதன் பார்வையில் ஒரு பரபரப்பு. அவன் சாரதாவின் சாயலில்தான் இருந்தான்.
“ஆ.. கேக்க மறந்துட்டேன். உன் ஹஸ்பென்ட் எங்கே..? என்ன பண்றாரு..?” என்றுதான் கேட்டேன். உடனே எங்கிருந்துதான் வந்தது என்று தெரியவில்லை. அவ்வளவு கோபத்தையும் காட்டிக்கொண்டு, திடுக்கென்று என்னைப் பார்த்தாள். அதில் நான் சுட்டெரிந்து விட்டது போல் தோன்றியது. பிறகு பேச்சை மாற்றினேன்.
“ஏய், ரிலாக்ஸ் சாரதா. ஏன் இவ்வளவு கோபப்படுற..? நான் ஒன்னும் தப்பா கேக்கலையே” என்று கூறி சமாளித்தேன்.
“கோபமா, கொலைவெறில இருக்கேன். நீ உன் புருஷன் எங்கேன்னு கேட்டியே.. அதுக்குத் தான்.” “ஏன்.. ஏதாவது பிரச்சனையா..?”
“பெரிய பிரச்சனை சரவணா. என் கதி எந்தப் பெண்ணுக்கும் வந்துற கூடாது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு சொல்லுவாங்க. நானும் அப்படித்தான் இருந்தேன். அவன்தான் என் கடவுள்-னு…” “என்ன சரவணா அப்படி பார்க்குற..? புருஷனே அவன்-னு சொல்றாளேன்னா. இனி இதுதான் அவனுக்கு மரியாதை” என்று கூறி மேலும் தொடர்ந்தாள்.
…கடவுள்-னு நினைச்சேன். ஆனா, அவன் அப்படி இல்ல, எனக்கு பெரிய துரோகம் பண்ணிருக்கான். என்னை விட்டுட்டு இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டான், அந்தப் பொறம்போக்கு பைய. எட்டு மாசம் இவனை வயித்துல சுமந்துட்டு வீட்டுலே இருக்கேன். இவன் அப்பன் இன்னொருத்திய கூட்டிக்கிட்டு வந்து நிக்கிறான்.” அவளின் வேதனைக்குக் காரணம் என்ன என்பது இப்போதுதான் எனக்குள் புரிந்தது.
“அதுவும் யாரைத் தெரியுமா..? என் ஃப்ரெண்டு செல்விதான். சிறுக்கி, எவ்வளவு பெரிய துரோகம் பண்ணிருக்கான்னு பாத்தியா..? ஃப்ரெண்டு புருஷனே கல்யாணம் பண்ணிக்குறோன்ற வெக்கம், உருத்தல் கூட அவள்கிட்ட இல்ல. கல்யாணம் பண்ணிட்டு அவனோட வந்து நீ, நான், இவரு எல்லாம் சேர்ந்து வாழ்வோம்-னு சொல்லி எனக்கு ஆறுதல் சொல்றா.. எனக்கு வந்ததே கோபம்… இவ யாரு எனக்குப் பிச்சை போடுறதுக்கு.. இவ பிச்சையில வாழனும்-னு என் தலையில ஒன்னும் எழுதல. அப்படிப்பட்ட வாழ்க்கையும் எனக்கு தேவையில்ல..” அவளது பேச்சில் ஆக்ரோஷம் நிறைந்துக் காணப்பட்டது. நான் கேட்டுக்கொண்டே, அவளது கழுத்தைப் பார்த்தேன். திருமணமானவள் என்ற எந்தவொரு அறிகுறியுமின்றி வெறுமனே கிடந்தது.
“சாரதா, தாலியே காணு..”- கேட்க சற்று தயங்கினேன்.
அவளும், “தைரியமா கேளு, தாலி எங்கடின்னு கேக்குற.. அவனே எனக்கு வேண்டாம், இதுல அவன் தாலி மட்டும் எதுக்குன்னு அவன் முகத்துலேயே வீசிட்டேன். நீயும் வேண்டாம், உன் உறவும் வேண்டான்னு அவன் முகத்துக்கு நேரா சொல்லிட்டும் வந்துட்டேன். அப்பான்னு சொல்லிட்டு என் பிள்ளையை பார்க்க வந்தே, என் சாவுக்கு நீதான் காரணம்-னு எழுதிட்டு செத்துருவேன்னு சொல்லிட்டுத்தான் வந்துருக்கேன். இனி பைய ஜென்மத்துக்கும் வர மாட்டான்.” என்றாள்.
“இதுல உங்க அம்மா எதுவும் சொல்லலையா..?”
“அம்மாவா.. அவங்கப் பழைய காலத்து ஆளு. ஆம்பளைங்க அப்படித்தாண்டி இருப்பாங்க.. பொம்பளைங்க நம்மதான் கொஞ்சம் பொறுத்து போவோம்-னு சொன்னா, நான் முடியாதுன்னே.. அவளும் கேட்டப் பாடில்ல, நீ சேர்ந்து வாழ்றதுதான் நல்லதுன்னு சொல்லிட்டே இருக்காள். நானும் அவனோட வாழ்றதுக்கு இஷ்டம் இல்லேன்னு சொல்லிட்டு இருக்கேன். “ஓ… அதுதான் அவங்க கோபத்தோட போனாங்களா..?”
“ஆமாம். இன்னைக்கு அதே ராமாயணந்தான். நான் முடிவா சொல்லிட்டேன், அவனோட வாழ முடியாதுன்னு..”
“சாரதா, நீ கொஞ்சம் அவசர பட்டியோன்னு…”
“இல்லவே இல்ல சரவணா. நீ எதை வச்சு சொல்றேன்னு எனக்குப் புரியுது. இதோ இந்தப் பிள்ளைக்கு அப்பா என்ற உறவு இல்லாமே போகும்… அதுக்குத் தானே அவசரபட்டேன்னு சொல்றே..” -கூறிவிட்டு என்னைப் பார்த்தாள். நானும் அவள் கூறியதற்கு சரி என்று தலையசைத்தேன்.
“நான் கிராமத்துப் பொண்ணு தான். நல்லாவும் படிச்சுருக்கே. என் படிப்பு போதும் இவனை வளக்குறதுக்கு. அவன் மூச்சுக் காத்துக் கூட இவன் மேல பட்டாலும், இவனுக்குத் தான் கெட்டது. அவன் சகவாசமே இவனுக்கு இருக்கக் கூடாது. இந்தத் துரோகத்தை நான் பண்ணா, அவன் ஒத்துப்பானா.. பொம்பளைதானே பொறுத்து போயிருவான்னு நினைச்சுட்டான், நாயி” அவள் கூறியதிலிருந்தே எனக்குள் ஓர் கேள்வி கேட்க தூண்டியது.
“நீ சொல்றதே பார்த்தால், பொண்ணுங்க பொறுத்துப் போக கூடாதா..?” -தூண்டிய கேள்வியையும் கேட்டுவிட்டேன்.
“போகலாம். எப்பன்னு தெரியுமா..? நீங்க (ஆம்பளைங்க) எங்களுக்கு உண்மையா இருக்கனும், மரியாதையா எங்களை நடத்தனும். அப்போதான் நாங்க பொறுத்துப் போறதுக்கு ஒரு நியாயம் இருக்கு. இவன மாதிரி உண்மையா இல்லாத ஆளுக்கெல்லாம் நான் பொறுத்து போகனும்-னு அவசியம் இல்ல..” அவள் கூறும் விதத்தில் நிறைய திமிருத்தனம் இருந்தது. ஆனால், அது உண்மையாகவே பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றும் தோன்றியது. சிறிது நேரம் யோசித்து விட்டு, பின்பு…
“சரி, அவர் வந்து உங்கிட்ட மன்னிப்பு கேக்குறாரு, அவளைவிட்டு பிரிஞ்சு உன்னுடனே வாழ தயார இருக்காரு. அப்போ என்ன செய்வே..?”- நிதானமாக அவளிடம் கேட்டேன்.
“எங்கிட்ட மன்னிப்பு கேக்க வந்தா, நான் மன்னிச்சுருவேன். ஆனா, இனி ஒருநாளும் சேர்ந்து வாழ மாட்டேன். எனக்கு சுய மரியாதையும் உண்டு, மனிதாபிமானமும் உண்டு.”
“நீ சொல்றதே எனக்குப் புரியல. மன்னிச்சுருவேன்னு சொல்ற, ஆனா அவனோட வாழமாட்டேன்னும் சொல்ற..”
“நான் தான் சொன்னேனே, அவனா வந்து மன்னிப்பு கேக்குறான், மனிதாபிமானத்துல அவனை மன்னிப்பேன். எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, அது யாருக்கும் தலை வணங்காது. அவன் என்னையே ஏமாத்திட்டு போனவன், அவனோட எப்படி நான் வாழ முடியும்” என்று கூறி முடித்தாள். அவளது உரைகள் அனைத்திலும் தெளிவான சிந்தனைகள் குடியிருந்தன.
“சரி, இப்போ என்ன பண்ணலாம்ன்னு இருக்கே..?”
“அதுக்கு தான் கடவுள் உன்னை அனுப்பி இருக்காரு. எனக்கொரு வேலை மட்டும் கிடைச்சாப் போதும். நான் வேலைக்குப் போயிட்டே, இவனை வளத்துருவேன். வேலைக்கு ஏற்பாடு பண்ணி தா, சரவணா. எனக்கு இந்த உதவியை மட்டும் செய்” -கலங்கியவாறே கூறினாள்.
நானும் அவளது கோரிக்கைக்கு உறுதி கூறிவிட்டு விடை பெற்றேன். அறைவாயிலுக்கு வந்து மீண்டும் அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள், குழந்தை மடியில்தான் இருந்தது. அவளது முகம் பிரகாசமாக இருந்தது. இப்போதும் அவள் நிறைய மாற்றங்களைக் கண்டு இருக்கிறாள். உருவத்திலும் மட்டுமல்ல, அவளது எண்ணங்களிலும் கூட…
– கதைப் படிக்கலாம் – 64
இதையும் படியுங்கள் : நிஷாவின் விலங்கு…