– மு. அஜ்மல் அகம் மது
“துபாய் மால்”… துபாயின் அதிசயங்களுள் மிக முக்கியமானது. சுமார் ஒரு மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில், 1200 கடைகளை உள்ளடக்கிய பெரிய வணிகக் கடல். எல்லோரும் முகக் கவசத்தோடும், சமூக இடைவெளியோடும் பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டிருந்தார்கள்..
முகமது ஹாரிஷ், தன் காதல் மனைவி சஞ்சனா தேவி மற்றும் மூன்று வயது நிரம்பிய ஒரே செல்ல மகள் சஹானாவோடு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். ஹாரிஷ், துபாயில், பன்னாட்டு நிறுவனமொன்றில், பட்டயக் கணக்காளராய் பணிபுரிந்து வருகிறான். கை நிறைய சம்பளம். அவனுக்கும், சஞ்சனா தேவிக்கும் பூர்வீகம்… கோயம்புத்தூர் தான்.
பள்ளிக்கூட காலத்திலிருந்தே ஹாரிஷிற்கும் , சஞ்சனா தேவிக்கும் நல்ல நட்பிருந்தது. அது கல்லூரியில் காதலாய் உருமாறியது. விஷயம் வெளியே கசிந்து, இருவரது வீட்டிலும் பூகம்பம் வெடித்தது. ஹாரிஷின் தொடர் பிடிவாதத்தின் காரணமாக, பல மாதங்கள் கழித்து, கண்டிப்பான இஸ்லாமிய பாரம்பரிய குடும்பமாயிருந்தாலும், ஒரே மகன் என்பதால், ஹாரிஷின் தந்தை அப்துல்லாவும், தாயார் ஆமினாவும் கொஞ்சம் இளகி வந்திருந்தார்கள். ஆனால் ஆச்சாரமான சஞ்சனா தேவியின் தந்தை கிருஷ்ண ஐயரும், தாயார் பார்வதி அம்மாளும், சஞ்சனாவின் தம்பி – கல்லூரி இறுதி ஆண்டு மாணவன் – ஜானகிராமனும், அவர்களின் காதலை எதிர்த்து வந்தனர். கிருஷ்ண ஐயர், வாழ்க்கை நெறிமுறைகளிலும், சமய ஐதீகங்களிலும் தீராத நம்பிக்கைக் கொண்டவர்.
முகமது ஹாரிஷ் C.A. படித்து முடித்த பின், துபாயில் வேலை கிடைத்து சென்றுவிட்டான். சஞ்சனா தேவிக்கு அவளது பெற்றோர்கள், திருமணம் செய்ய வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது, ஃபோனில் அனைத்தையும் அவனிடம் சொல்லி அழுவாள். சஞ்சனாவின் தம்பி ஜானகிராமன், படித்து முடித்து கத்தார் நாட்டில் ஒரு நல்ல வேலை கிடைத்து, அங்கு சென்றுவிட்டான்.
ஒரு முறை, ஹாரிஷ் துபாயிலிருந்து விடுமுறைக்கு, ஊர் வந்திருந்த போது, சஞ்சனா அவனை நேரில் சந்தித்து, “எனது பெற்றோர்கள் ஒரு மாப்பிள்ளையை எனக்கு விரைவில் முடிக்கும் தருவாயில் உள்ளார்கள். இனியும் நான் இங்கிருப்பது நல்லதல்ல. இங்கேயே நமது திருமணத்தை முடித்துக்கொண்டு, உங்களோடு என்னையும் இந்த முறையே அழைத்துச் சென்று விடுங்கள்” எனக் கதறினாள். அவனது பெற்றோர்கள் நிச்சயம் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதும், அவனது நினைவுகளில் வந்துச் சென்றது. இருப்பினும் சூழல் கருதி, அவளது விருப்பப்படியே பதிவுத் திருமணம் செய்துக்கொண்டு, அவனது வீட்டிற்கு மணக்கோலத்திலேயே அவளை அழைத்து வந்தான்.
அப்துல்லாவும், ஆமினாவும் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். நிலைமையை புரிந்துக்கொண்டு, மகனையும், மருமகளையும் ஆரத்தியெடுத்து, வீட்டினுள்ளே அழைத்து வந்தனர். அப்துல்லா, முறைப்படி கிருஷ்ண ஐயருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோபத்தில் கொதித்தெழுந்தார். ‘எனக்கு ஒரே பையன் மட்டும் தான். பெண் குழந்தை இறந்து விட்டது. இந்த வீட்டிலிருந்து யாரேனும் அவர்களோடு தொடர்பு வைத்தால், அவர்களையும் தலை முழுகி விடுவேன்’ என மனைவியைப் பார்த்து மிரட்டிவிட்டு, அவரது அறைக்குள், படபடப்போடு சென்றுவிட்டார்.
ஒரு மாத இடைவெளியில், சஞ்சனாவையும் தன்னோடு துபாய் அழைத்துச் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து முடித்தான். துபாய் புறப்படுவதற்கு முன், சஞ்சனா தன் பெற்றோரை சந்திக்க விரும்புவதாக, ஹாரிஷிடம் தயங்கியபடி கூறினாள். தானும் உடன் வருவதாகக் கூறி, அவளோடு R.S. புரத்தில் அமைந்துள்ள கிருஷ்ண ஐயர் பங்களாவிற்கு சென்றனர். இருவரையும், வீட்டின் ஹாலிலிருந்து கவனித்த கிருஷ்ண ஐயர், கேட்டின் முன் நின்றிருந்த கூர்க்காவை நோக்கி, “ஏய்… யாரையும் உள்ளே விடாதே” எனச் சொல்லி உள் சென்று விட்டார். சமீபத்தில் வேலையில் சேர்ந்த அந்த கூர்க்காவும், அவனது கடமையைச் செய்தான். சஞ்சனா வெடித்துக் கதறினாள். வீட்டினுள்ளிருந்து அவளது தாயாரின் விசும்பல் சத்தத்தைக் கேட்க முடிந்தது…
“ஹேய்! சஞ்சு, என்ன பலமான யோசனை. வீட்டிற்குப் புறப்படலாமா? நாளை, நீயும் பாப்பாவும் இந்தியா பயணிக்க வேண்டுமல்லவா, பேக்கிங் செய்ய வேண்டிய வேலை வேறு இன்னும் நிறைய உள்ளது”.. என ஹாரிஷ் நினைவூட்டினான். அவனது அலுவலகம், உள்ளூர் ஊரடங்கால் பலமாதங்களுக்குப் பின் இப்போது தான் செயல்படத் துவங்கியிருப்பதால், அவனுக்கு விடுமுறை கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது.
07.08.2020, வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு துபாயிலிருந்து இந்தியா புறப்படும் ‘வந்தே பாரத் ”போயிங் 737-800”, சிறப்பு விமானத்திற்கான பயணச்சீட்டும்’, துபாய் அரசின் அறிவுறுத்தலின் பேரில் இருவருக்குமான, கொரோனா டெஸ்ட்களையும் எடுத்திருந்தான். ‘Negative’ என்றே முடிவு வந்திருந்தது. பயணச்சீட்டுடன், கொரோனா மருத்துவச் சான்றிதழையும் சஞ்சனாவிடம் கொடுத்திருந்தான். அந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தான் தரையிறங்கும். கோவையிலிருந்து அவனது அப்பாவும், அம்மாவும் விமானநிலையம் வந்துச் செல்வதற்கும், வசதியாயிருக்கும்.
சஞ்சனாவிற்கு இவனை இங்கு விட்டுவிட்டு தானும், மகளும் மட்டும் ஊர் செல்வதில் அத்தனை விருப்பமில்லை. இதுவரையிலும் அப்படிச் சென்றதுமில்லை. சஞ்சனா அதைச் சொல்லியே பலமுறை புலம்பிக் கொண்டிருந்தாள். “இந்த நோய் தொற்று கொஞ்சம் குறைந்து, இயல்பு நிலை லேசாக திரும்பட்டும். நானே ஊர் வந்து உங்களிருவரையும் அழைத்து வந்து விடுகிறேன் இன்ஷாஅல்லாஹ்” என அவளை அடிக்கடி சமாதானம் செய்து வந்தான்.
ஊர் புறப்படும் நாளும் வந்தது. சஞ்சனா தேவி, பேரழகி. எப்போதுமே, அப்போதுதான் பூத்த புது மலராய், முகப்பொலிவோடு வலம் வருவாள். அன்று முகம் சோர்வாய் காட்சியளித்தது. இத்தனை முறை விடுமுறைகளில் ஊர் சென்றும், அவளது பெற்றோர்களை, அவள் பார்க்க முடியவில்லை. அவளது தந்தை கிருஷ்ண ஐயர், இன்னும் வைராக்கியம் கொஞ்சமும் குறையாமலேயே இருக்கின்றார். அவளது ஏக்கமும், விருப்பமும் அவனுக்குப் புரிந்தது.
இப்போதெல்லாம், வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்பாகவே விமான நிலையத்தில் ரிப்போர்ட் செய்யவேண்டும் என்பதால், காலை 10 மணிக்கெல்லாம் மூவரும் விமான நிலையம் வந்துவிட்டனர். கொஞ்ச நேரத்திலேயே, ஒலிபெருக்கி பயணிகளை உள்ளே அழைத்தது. “அப்பாவும், அம்மாவும் கோழிக்கோட்டிற்கு உங்களை அழைத்துச்செல்ல ஏர்போர்ட் வருவார்கள். இந்த விமானம், இந்திய நேரப்படி, இரவு 19.30 மணிக்கு தான் தரையிறங்கும். தைரியமாக சென்று வாருங்கள்.
கோயம்புத்தூர் சென்ற, சில தினங்கள் கழித்து, உனது பெற்றோரை அவர்களது வீட்டிற்குச் சென்று, சந்திக்க முயற்சி செய். இஸ்லாத்தில் ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’ என சொல்லப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை ‘தந்தையின் காலடியிலும் சொர்க்கம் மறைந்துக் கிடக்கின்றது’ என்று தான் சொல்வேன். சஹானாவைப் பார்த்தால், உனது தந்தை ஒரு வேளை மனம் மாறலாம். “இறைவன் மகா பெரியவன்” எனச் சொல்லி மகள் சஹானாவை முத்தமிட்டு, இந்த நோய் தொற்றுக் காலத்தில், விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதியில்லை என்பதால், வெளியிலிருந்தவாறே வழியணுப்பி வைத்தான். நுழைவு வாயிலிலிருந்து சஞ்சனா அவனை திரும்பிப் பார்த்து, கலக்கத்தோடு கையசைத்தாள். ஹாரிஷிற்கு மனதை என்னவோ செய்தது.
ஹாரிஷின் பெற்றோர்கள், மருமகளையும், பெயர்த்தியையும் பார்க்கும் ஆவலில், மாலை 6.00 மணிக்கெல்லாம், கார் மூலம் கோழிக்கோடு- கரிப்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்து விட்டனர். கடுமையான மழைக் கொட்டிக் கொண்டிருந்தது. குடைகளை பிடித்தவாறு விமான நிலையத்தின் தாழ்வாரத்தை வந்தடைந்தனர். ஆமினா அம்மாளை ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு, அப்துல்லா அங்கிருந்த விமான வருகைக்கான அறிவிப்புப் பலகையை பார்வையிட்டார். முதலில், இரவு 19.00 மணிக்கு, கத்தாரிலிருந்து ஒரு ‘வந்தே பாரத்’ விமானம் வந்திறங்குவதாகவும், அதையடுத்து இரவு 19.30 மணிக்கு துபாயிலிருந்து வரும், ‘வந்தே பாரத்’ போயிங் விமானம் தரையிறங்குவதாகவும் தகவல் தெரிவித்தது.
சரியான நேரத்திற்கு விமானம் வந்திறங்குவதை அப்துல்லா, தனது மனைவி ஆமினாவிடம் சொல்லத் திரும்பினார். அப்போது, தூரத்தில் கிருஷ்ண ஐயரும், அவரது மனைவியும் விமான நிலைய பார்வையாளர்கள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். ‘எதற்காக இங்கு வந்திருப்பார்கள்?’ என யோசித்த சிறிது நேரத்திலேயே, ‘அவர்களது மகன் ஜானகிராமன் கத்தாரில் தானே உள்ளார். இன்றைக்கு வரும் விமானத்தில் ஊர் வருகிறாரோ! ‘என மிகச் சரியாக யூகித்தார். உண்மையும் அதுதான். மனைவியிடமும் அதை அவர் பகிர்ந்துக் கொண்டார்.
இரவு மணி 19.00 என விமான நிலைய கடிகாரம் மிளிறிக் கொண்டிருந்தது. மழை ‘ஓ’ வென்ற இரைச்சலோடு கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது, கிருஷ்ண ஐயரின் கைப்பேசி அழைத்தது. ‘அப்பா நான் தான். ‘கஸ்டம்ஸ் செக்கிங்’-காக விமான நிலையத்தினுள் வந்து விட்டேன்’, மகன் ஜானகிராமன் தான். ‘இன்னும் நாற்பது, ஐம்பது நிமிடங்களில் வெளியே வந்து விடுவேன். மழை அதிகமாகத் தெரிகின்றது. அம்மாவும், நீங்களும் கவனமாக இருங்கள்’ எனச் சொல்லி, ஃபோனைத் துண்டித்தான்.
கொஞ்சம் நேரம் கடந்தது. மழை இன்னும் குறைந்தபாடாயில்லை. கடிகாரம் 19.40 என நேரம் காட்டிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மகள் சஞ்சனாவும், பெயர்த்தியும் வந்து இறங்கி விடுவார்கள். இந்த மழையில் எப்படி ஊர் செல்வது? என அப்துல்லா எண்ணிக்கொண்டிருந்த போது…,
டமார், டமார் என சத்தங்களும், ஓ… ஓ.. வென அலறல்களும் கேட்ட வண்ணமிருந்தன. விமான நிலையக் கண்ணாடிகள் நொறுங்கி விழும் சத்தங்களும் தொடர்ந்துக் கேட்டன. பூகம்பம் வந்துவிட்ட பிரம்மையை ஏற்படுத்தியது. “துபாய் விமானம் அபகடத்திலாயி” எனக் கத்தியவாறு, விமான நிலைய அருகாமையிலுள்ள ‘கொண்டட்டி’ கிராமத்து மக்கள் சிலர், வேகமாய் விமான ஓடுபாதை நோக்கி விரைந்தனர். விமான நிலையத்தின் வெளியேக் காத்திருந்த பார்வையாளர்கள் பலர், உள்ளே பதறி நுழைந்தனர்.
ஹாரிஷின் பெற்றோர்களும் குடையை பிடித்தபடி விமான ஓடு பாதையை நோக்கி விரைந்தனர். இருவரும் “எல்லா மக்களுக்கும் தீங்கு இல்லாமல் காப்பாற்றிவிடு, எனது மருமகளும், பெயர்த்தியும் பாதுகாப்பாய் இருப்பதற்கு அருள் புரிவாய் யா அல்லாஹ்” என பிரார்த்தித்தவாறே ஓடுதளம் நோக்கி வேகமாய் நடந்தனர்.
அவர்களுக்கு சற்று முன்பாக கிருஷ்ண ஐயரும், பார்வதி அம்மாளும் விபத்து நடந்த பகுதியை நெருங்கி, விரைந்து சென்றுக் கொண்டிருந்தனர். விமான ஓடுதளம், குன்றின் மீது ஒரு தட்டையான மலைப்பகுதியில் அமைந்திருந்தது. இருபுறமும் 110-130 அடி பள்ளத்தாக்கு. அதைப் பார்த்தவர்களின் மனம் பதறிவிடும். கிருஷ்ண ஐயர் அவரது மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு, “முருகா, யாருக்கும் அதிக ஆபத்தில்லாமல் காப்பாற்றி விடு. யார், யார் பெற்ற பிள்ளைகளோ முருகா. எல்லாவற்றையும் லேசாக்கி விடு” என முனங்கிக்கொண்டே விரைந்தனர்.
ஒரே சத்தம், கதறல். காலணிகள், கை லக்கேஜுகள், விமானத்தின் இருக்கைகள் என சிதறிக் கிடந்தன. விமானம் மூன்று துண்டுகளாய் சிதறிக் கிடந்தன. பல மொழிகளில் முனங்கல்கள். “சாமி ஐயப்பா”, யா அல்லாஹ்”, “கர்த்தரே” என்ற கூச்சல்களுக்கு மத்தியில், “அப்பா” என்ற பழக்கமான குரல் கேட்டு, கிருஷ்ண ஐயர், கைப்பேசியின் டார்ச் லைட்டை, குரல் வந்த திசை நோக்கித் திருப்பினார். அங்கு தங்களது ஒரே மகள் சஞ்சனா, பெயர்த்தி சஹானாவை, தனது இடது கையால் இறுகப் பிடித்துக்கொண்டு, முகத்திலும், கைகளிலும் ரத்தம் வழிய, தரையில் விழுந்துக் கிடந்தாள். கிருஷ்ண ஐயரும், பார்வதி அம்மாளும் அதிர்ந்து கதறிவிட்டனர். “என் செல்லமே! நீ எங்கே மா இங்கே.? மருமகனை எங்கேம்மா? “என்று உடனே அடுத்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே, மகளின் நெற்றியிலும், கைகளிலும் முத்தமிட்டார். பார்வதி அம்மாள் பெயர்த்தியை மகளிடமிருந்து, வாங்கிக்கொண்டார்.
சஞ்சனாவிற்கு அதிகக் காயமில்லை. லேசான உரசல்கள்தான். பெயர்த்தியும் நலமாயிருந்தாள். சஞ்சனா, அப்பாவின் கால்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு, ‘ஓ’ வென அழுது தீர்த்தாள். ஹாரிஷ் வழக்கமாக சொல்லும் ‘தாயின் காலடியில் மட்டுமல்ல, தந்தையின் காலடியிலும் சொர்க்கம் மறைந்துக் கிடக்கின்றது’ என்பதை உணர்வு பூர்வமாய் உணர்ந்தாள்.
அந்த மழையிலும் அவளது உடல் புல்லரித்தது. அவளது கண்ணீர் துளிகள் மழைத் துளிகளோடு கலந்து, அவரது பாதங்களை கழுவிக் கொண்டிருந்தது.. அப்துல்லாவும், ஆமினா அம்மாளும் இவர்களின் அருகே வந்துச் சேர்ந்தனர். மருமகளையும், பெயர்த்தியையும் பார்த்தவுடன் கதறி அழுதனர். கிருஷ்ண ஐயர் அவர்களை அணைத்து, ‘பயப்பட ஒன்றுமில்லை. இறைவன் லேசாக்கி விட்டான்’ என ஆறுதல் கூறினார். அப்போது ஜானகிராமன் கைப்பேசியிலிருந்து அழைப்பு வந்தது…
‘அப்பா நான் வெளியே வந்து விட்டேன். நீங்களும், அம்மாவும் எங்கேயிருக்கின்றீர்கள். துபாயிலிருந்து வந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. நீங்கள் எங்கே நிற்கின்றீர்கள்’ என மீண்டும் கேட்டான். அவனிடம் விவரங்களைச் சொன்னார், ஜானகிராமன் பதறினான். ‘பயப்பட ஒன்றுமில்லை. நலமாக இருக்கின்றார்கள். நீ வெளியேயேக் காத்திரு. நாங்கள் வந்துவிடுகின்றோம்’ எனச்சொல்லி, எல்லோரும் விமான நிலைய வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். மழை கொஞ்சம் குறையத் தொடங்கியிருந்தது.
கிருஷ்ண ஐயரின் மேல் ஒட்டியிருந்த சேற்றுக் கறைகள், கொட்டிக்கொண்டிருந்த மழைத் துளிகளில் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. மகளையும், பெயர்த்தியையும் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்…
– கதைப் படிக்கலாம் – 39
இதையும் படியுங்கள் : “எனக்குள் ஒருவன்”