– உலகநாதன்
இரவு ஒன்பது மணி ஆயிற்று.
தன் தகர டிரங்க் பெட்டியை எடுத்து, அப்ப நா கெளம்பட்டா மாந்தோப்புக்கு என்றார், வேலாயுதம்.
கட்டு மஸ்தான நெடிய உருவம், குனிந்து வாசற்படி தாண்டினார். புதிதாய் வாங்கிய கடப்பாரை எடுத்து தோளில் வைத்து, மண்வெட்டியை அதில் முன்பக்கமாய் மாட்டி, கிளம்பினார்.
நாளை ராத்திரி சாப்பாட்டுக்கு வந்துடு, மதியத்துக்கு கூழ் காய்ச்சிட்டேன் எடுத்துப்போ…
கேழ்வரகு கூழ் ஒரு பித்தளை தூக்கில், தொட்டுக் கொள்ள நறுக்கிய வெங்காயம், பச்சமிளகாய், உப்பு கொஞ்சம் தாளில் மடித்து ஒரு துணிப் பையில் போட்டுக் கொடுத்தாள்.
அய்யோ மாமா, முக்கியமானத மறந்துட்டனே…
ஓடி, ரூபா நோட்டுக்களை கையில் கொண்டு வந்தாள்.
இன்னாடி, இது இம்மாம் பணம்..
அம்மா கொடுத்தாங்க, அட்வான்ஸா ஆயிர ரூபா ஒனக்கு…
அடிப்போடி, எனக்கெதுக்கு இம்மா, ஐநூறு ரூபாவை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை நீட்டினார்.
வாணாம் மாமா, நீ வச்சிக்க… எனக்கும் ஆயிரம் கொடுத்திருக்காங்க.
அப்படியாடி ஆச்சரியப்பட்டு, முதலாளி அம்மாவுக்கு ரெம்பத் தாராள மனசுதான், ஓலைப் பெட்டியில் பணத்தை வைத்து, மடியில் பத்திரப்படுத்தினார்.
சரி அப்ப வரட்டா, எங்கக்கா மவளே, என்ன நெனச்சி ஒன் மனச அலைய உடாத, உம் புருஷன் கந்தப்பனிருக்கா, அவன நல்லா கெவனி, வரட்டா, சிரித்துக் கிளம்பினார்.
முரட்டு கால் செருப்பை மாட்டி வீச்சி நடந்தார். அரை மணிக்குள் போய்ச் சேர்ந்து விட்டார், மாந்தோப்புக்கு. அண்ணா கயிற்றில் (அரைஞாண்) கட்டிய சாவி எடுத்து, வேலிக் கதவு பூட்டைத் தடவி திறந்தார். உள்ளே போய் மறுபடியும் சங்கிலி இணைத்துப் பூட்டினார். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
திருட்டுப் பயலுவலுக்கு இது ஒரு வேலி, ஒரு கதவு, அதுக்கொரு பூட்டு. உட்டான்னா ஒரு ஒதயில எல்லாம் பறக்கும்.
தோப்பு, அரை நிலவின் குளுமையில் நனைந்துக் கொண்டிருந்தது. கொட்டகைனுள் நுழைந்து, ராத்தலை ஏற்றினார். கயிற்றுக் கட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டு, பாய் எடுத்துப் போட்டுப் படுத்தார். தனிமையான புது இடம், புது வாழ்வு, பல மாதங்களுக்குப் பிறகு மனம் அமைதியாய் இருந்தது. நிம்மதியாய் தூங்கினார்.
விடியுமுன் எழும் பழக்கமுள்ள வேலாயுதம், நாலு மணிக்கே எழுந்துக் கொண்டார். தோப்புக்குப் பின்புறம் போய்க் காலை கடனை முடித்து வந்து, கிணற்றில் வாளி போட்டு நீர் இறைத்து கை, கால், முகம் அலம்பினார். கருக்கலிலேயே, தன் வேலையை ஆரம்பித்து விட்டார். மண் வெட்டி கடப்பாரை எடுத்து, ஒவ்வொரு மாமரங்களின் அடியையும் சுற்றி, ஒரு மூன்று அடி விஸ்தீரனத்திற்கு மண் எடுத்து, பாத்தி செய்தார். சூரியன் கீழ் வானத்தில் ஏறி நல்ல வெளிச்சம் வர, பாத்தி வேலை முடிந்தது. வாளியில் தண்ணீர் சேந்தி குடத்தில் விட்டு மரங்களுக்கு நீர் பாச்சினார். நீரைக் கண்டு பல மாதங்களாயிருக்கும். குடம் நீரும் நொடியில் மறைந்து போனது. ஒரு பத்து மணியளவில் எல்லா வேலையும் ஆனது. கொட்டைகைக்கு வந்து, உட்கார்ந்து இளைப்பாறினார். இப்படி உடல் வருத்தி வேலை செய்து, பல வருடமாகி விட்டது.
தோப்பின் முன்புறத்தில் ஏதோ ஆள் நடமாட்ட சத்தம். சுருக்கென எழுந்து, விடு விடுவென நடந்தார். இவர் வருவதுக் கண்டு, ஒரு பச்சை சேலை, மரத்தின் பின் மறைவது தெரிந்தது.
தே யாரது, அங்க யாரதி..ன்ற?…
சத்தம் போட்டுக் கொண்டு நெருங்கினார். ஒரு பெண்பிள்ளை வெல வெலத்து நின்றிருந்தாள்.
என்னாது, யாரக் கேக்காமா வேலி தாண்டி வர்றது…
ஒன்னுமில்லங்கய்யா, சுள்ளி (காய்ந்து விழுந்த சிறு மரக்கிளை) பொறுக்க வந்தே(ன்). சத்தம் போடாதீங்க போயிடுறேன்…
தெனத்திக்கு (தினமும்) இது நடக்குதா என்னா, அதான் வேலி போட்டுக் காவக் காக்க நா இருக்கேனே, இனி வரக்கூடாது, அதட்டினார்.
அய்ய சுள்ளியத்தானே பொறுக்க வந்தேன்…
இப்ப சுள்ளியிம்பிங்க, அப்றம் கா காச்சா, அதெ ரண்டு பறிச்சா என்னா இம்பிங்க, அதெல்லாம் கூடாது போயிட்னம்…
அப்டில்லாம் திருட மாட்டோம். மண்ணில மக்ர சுள்ளியத்தானேய்யா எடுக்கரன். இந்த வெரட்டு வெரட்டிறீங்க. நாங்க ஏழைங்க எங்க போவ வெறவுக்கு. ரெண்டு சுள்ளி எடுத்தா என்னா கொறைஞ்சிடும், யக்கேன்…
பார்க்க பாவமாய் இருந்தது. சரி சரி போவட்டும் என்று திரும்பி நடந்தார்.
குனிந்து, அவசரத்தில் தரையில் போட்ட சுள்ளிகளை மீண்டும் கையில் பொறுக்கி எடுக்க ஆரம்பித்தாள். சற்று நேரம் பொறுத்து, கட்டுக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு, கொட்டாய் அருகே வந்தாள்.
வரந் தோட்டக்காரய்யா…
ஊங் ஊங் என்றார் விறைப்பாய்.
ஆமா எந்தூரு நீங்க? புதுசா இருக்கே, பாத்ததில்லையே…
பக்கத்துல ஆனாங்கூறு. இங்க எங்கக்கா மவ வூட்டுக்கு வந்தே(ன்). அவ வேல செய்ற வூட்டுக்காரங்க தோட்டமிது, அதான் காவலுக்குப் போட்டுருக்காங்க.
அதானே பாத்தே, இம்மா நாளா இல்லியேன்னு. கொஞ்சத் தண்ணி இருக்குமா தாகத்துக்கு?
தோ, பானையைக் காட்டினார். சுள்ளிக் கத்தையைப் பொத்தென தரையில் போட்டு விட்டு, உள் சென்று நீர் குடித்து வந்தாள். பக்கத்தில் உட்கார்ந்து, முந்தானை அவிழ்த்து, முகத்தைத் துடைத்து, சேலை முடிச்சவிழ்த்து வெத்திலை எடுத்தாள்.
போட்றீங்களா?
இம், கை நீட்டினார். வெத்திலை பாக்கு எடுத்து, சுண்ணாம்பு கரண்டவத்தில் (சுண்ணாம்பு வைக்கும் சின்ன டப்பி) கொஞ்சம் நகத்தால் கிள்ளி, தடவி மடித்துக் கொடுத்தாள். அவரும் வாங்கி வாயில் அதக்கி கடித்தார்.
நீ எங்க இருக்கர்து?
ஒரத்தூருதா…
எங்க ?
தோ பக்கந்தா. என் ஓரவத்தி வூட்டுல…
ஏன் புள்ளங்க?
இருக்கான் ஒரு தருதலை, உருப்படாம. அவரு போன பின்ன கஞ்சி ஊத்துவான்னு பாத்தா, குடிச்சி நாசமாப் போனான்…
அப்பொழுது தான் கவனித்தார், அவள் கழுத்து கை காலில் ஒன்றுமில்லையென்று.
வேற நாதியில்ல, ஓரவத்தி வூட்டுல, ஒண்டிக்கிட வேண்டி கெடக்கு
பொழப்பு ஒன்னிமில்லயா?
ஊம்… உதட்டைப் பிதுக்கினாள். எங்க?, களே (களை – நெற் பயிரிடை யே முளையும் புள்) வெட்ட போவன், அறுப்பு இருந்தா போவன். ஆனா எங்க இப்ப, வெவசாயம்?, மூணு போக நெல்லா நடக்கூ…………. அவங்கவங்க கரும்பில்ல போட்டுற்றாங்க
ஒங்களுக்குப் புள்ளங்க?
ரெண்டு, அவெனெல்லாம், வேலத்தேடி அசலூரு போயிட்டானுவ. அவன்லுக்கு ஆத்தா இருந்தாலாவது, பொண்ணு பாத்துக் கட்டி வப்பான்னு, ஒட்டிக்கிட்டு கெடந்திருப்பானுவ, அப்பன் தனியா என்னா பண்ணுவானுன்னு பறந்துட்டானுவ. தனிக்கட்டையா ஆயி கெடந்தன். பக்கத்தூட்டு அக்கா ஒருத்தங்க, சொந்தம் மாரி, அவங்க பொண்ணுதான் இங்க கொண்டாந்து வேலக்கு வச்சிது.
இந்தக் காலத்தில பெத்தது எதுவும், அப்ப ஆத்தாளுக்கு எங்க சோறு போடப் போவுதுங்க
கொஞ்ச நேரம் வேறு கதைகளை பேசிக் கொண்டிருந்து விட்டு,
வரன்ய்யா எழுந்தாள். ஒரு கை கொடேன் என்றதும், சுள்ளிக் கட்டை தூக்கி தலையில் வைத்ததும், தலை பாரத்துக்கு ஏற்ப கையாட்டி நடந்தாள்.
கட்டு நழுவாம, இந்த பெண்டுக நடக்கிறதே ஒரு அழவுதான் போ.
பார்த்து ரசித்தார். தன் அங்கம்மாவின் நினைவில் ஒரு பெரு மூச்சு.
மறுநாள் வேலையெல்லாம் முடித்து, பத்து மணிக்காய் கொட்டகையில் வந்து உட்கார்ந்தார்.
நேற்று வந்த பொம்பள இன்னிக்கும் வருமா, பேச்சி தொணைக்காவுமே…
காத்திருந்தார். வேலிக் கதவைக் கூட திறந்து வைத்திருந்தார். ஆனால் வரவில்லை. அடுத்த நாளும் இல்லை.
காவலுக்கு ஆள் வந்துட்டுதே, திட்டுராங்களே இன்னு, வேறு இடம் பாத்திட்டுருக்கும்.
அவள் நினைப்பைத் தள்ளினார். ஆனால் என்னவோ, அது வந்தா கொஞ்சம் நேரம் போகுமே என்று மனம் தேடியது.
மூன்றாம் நாள் சூரியன் உச்சிக்கு ஏறிய சமயம். கொட்டாய்க்கு அருகே குந்தியிருந்தார். காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்தார்.
வந்திட்டியா, வா வா சிரித்தார். எங்க காணல ரெண்டு நாளா
அவளும் சிரித்து, அன்னிக்கு அப்டி வெரட்டனவரு, இன்னிக்கு என்னத் தேட்னீங்களா சாமி, ன்னா…
ஆமா, என்னா வயசானாலும் தொண தேடுதில்ல..
அவள் சட்டென நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
அட, பேசற்துக்குத்தா(ன்) சமாதானம் செய்தார். அருகில் வந்து உட்கார்ந்தாள்.
வெத்தல போட்றயா… மடியில் இருந்த வெத்திலைக் கூடையை எடுத்தார்.
இல்லப் பசிக்குது, அவள் முகம் களைத்திருந்தது.
கூழ் இருக்கு கேப்பக்கூழு சாப்பிட்றீயா, தலையாட்டினாள்.
கரைக்கவா?
எங்கிருக்கு சொல்லு…… நா கரைக்கரன்…
எழுந்தாள். அவரும் எழுந்து உள்ளே போய் எடுத்துக் கொடுத்தார். கை கழுவிக் கொண்டு, தூக்கில் கூழை எடுத்து, ஒரு பாத்திரத்தில் விட்டு, நீர் விட்டு கையால் கரைத்தாள். உப்புப் பதமாய்ப் போட்டுக் குவளையில் ஊற்றிக் கொடுத்தாள்.
நீ மொதோ சாப்டு…. பசியின்னியே…
அன்னாந்து தூக்கி விட்டாள். குவளைக் கூழும், ஒரே மூச்சில் காலியானது.
ஒன்னிதல பங்கு போட்டுட்டேன். ஒனக்குப் போதுமா, மீதியை ஊற்றிக் கொடுத்தாள்.
போதும் போதும். நீ சாப்டதே நா சாப்டா மாரி ஆச்சி…
மீதமிருந்தையும் கரைத்து மாற்றி மாற்றிக் குடித்து முடித்தனர். அவள் வயிறு திம்மென்று அடங்கியது.
செத்த படுக்கவா…
பாயிருக்கு போட்டு படு, வெளியேறினார்.
அரை மணி கழித்து வந்துப் பார்த்தார். அவள் இன்னும் தூக்கத்தில். பக்கத்தில் உட்கார்ந்து காத்திருந்தார். அவள் விழித்துப் பார்த்து மிரண்டு, சட்டென எழுந்து உட்கார்ந்தாள். தலை கோதி முடிந்து, முந்தானையால் முகத்தில் துளிர்த்த வேர்வையைத் துடைத்து. அவரைப் பார்த்து சிரித்து.
பொழுது சாஞ்சி போச்சே, ரெம்ப நாழியா தூங்கிட்டன்…
நல்ல பசிக் களப்பு போல,
ஆமா ய்யா, நேத்தும் ஒன்னும் சாப்பிட்ல. அங்க வூட்டுல ஒன்னும் நெலம சரியில்ல…
ஏன் என்னாச்சி?
அத்த வுடு, எங் கவல என்னோடது, ஒனக்கெதுக்கு…
சரி போவட்டும், தெனமும் இங்க வந்துடு கூழு இருக்கும். வேணும்ன்னா, நாம்ப சோறும் பொங்கிக்கலாம்.
அவரை உற்றுப் பார்த்தாள். நெசமாத்தான் சொல்றயா
ஆமாந் தே நெசமாத்தா, நீ பட்னியா எதுக்குக் கெடக்கனம், எம் மனசு கேக்கல…
இந்த நாதியத்தவளுக்கு, நீ சொன்ன வார்த்தையே போதும், கண் கலங்கிவிட்டது.
நானும் ஒரு காலத்தில் இப்டித்தான் இருந்தேன். எனக்குத் தெரியும் அந்தக் கொடும. ஒன்னு பண்ணலாம், இங்க கட கன்னி ஒன்னும் எனக்குத் தெரியாது. நீயும் கூட வா, போயி வேண்டியத வாங்கியாந்து சமைக்கலாம் ராவுக்கு
எழுந்தார். இருந்தக் கோணிப்பை இரண்டை எடுத்து, செருப்பு அணிந்து கிளம்பினார். அவளும் தொடர்ந்தாள்.
மாலை இருவரும் திரும்பினர். அவர் தோளில் ஒரு சாக்கு மூட்டை, அவள் கைகளில் இரண்டு பைகள். சட்டி, பல்லா (சிறிய மண் பானை). கொட்டகைக்குப் பின்புறம் மூன்று கல் வைத்து அடுப்பை மூட்டினாள். அரிசி எடுக்கப் போனவரிடம் பிடிங்கி, நீ எதுக்கு நானிருக்க, என்று அரிசிக் கழுவி உலையில் போட்டு விட்டு, சட்டியில் குழம்பு கூட்டினாள். காய் கறி நறுக்க அரியாமணை, கத்தி தேடினாள். கொடுவா கத்தி (மரம் வெட்டும் கத்தி) எடுத்துக் கொடுத்தார். அவள் சிரித்து, வாங்கி அதைத் தரையில் வைத்து காலால் பிடித்து, காய் கறி அரியும் லாவகத்தைப் பார்த்து அவர் ரசித்தார்.
சமையலுக்குன்னா பெண்டுகதான். ஆம்பளக்கி இந்தப் பக்குவம் வருமா.
அவளை சமைக்க விட்டு, லாந்தருக்கு சீமெண்ணெய் (சீமை எண்ணெய் – கெரோசின்) ஊற்றி, விளக்கை ஏற்றி விட்டு வெளியில் காத்தாட உட்கார்ந்து, அந்தி சாயும் அழகைக் கண்டு ரசித்திருந்தார். பட்சிகளும் பறவைகளும் கத்தி கூச்சலிட்டு, கூட்டுக்குத் திரும்பும் நேரம். ஒரு மணி நேரத்தில் சாப்பாடு தயாராகி விட்டது. தோப்பின் ஓரத்தில் தானாக வளர்ந்து காய்ந்திருந்த வாழைக் கன்றில், சருகு இலையைப் பிய்த்து எடுத்து வந்தார். கிழக்கு வானில் முக்கால் நிலவு, கொட்டைகைக்கு முன்புறம் வெளிச்சம் காட்ட, உட்கார்ந்தனர். இலையில் நீர் தெளித்து துடைத்து, அகப்பையால் பானை சோற்றை அள்ளி சுடச் சுட போட்டாள், கத்தரிக்காய் குழம்பை ஊற்றினாள். தொட்டுக் கொள்ள, நாட்டு அவரைப் பொறியல். பிசைந்து கவளம் போனது.
நல்லாருக்கா?
ஒன் கை பக்குவம், ஒன்ன மாரியே நல்லாயிருக்கு. அட நீ ஏன் சும்மா பாத்திட்ருக்க தே, நீயும் போட்டு சாப்டு…
அவளும் ஒரு சருகை எடுத்துப் போட்டு சாப்பிட்டாள். பானை சோறும் காலியானது. ஏப்பம் விட்டு எழுந்து, கை கழுவி வந்தனர்.
இப்டி வயிரார சாப்பிட்டு எம்மா நாளாச்சி!!..
உட்கார்ந்து வெத்திலை மடித்தாள்.
ஆமாமா, நானும் இந்த ரா வேளைல இம்மாஞ் சோறு சாப்பிட்டு வருஷமாச்சி…
சரி இவளே, ஒம்பேர கேக்கவே இல்லையே, என்னா பேரு ?
செங்கேனி, வெத்திலைக் கொடுத்தாள்.
செங்கேனி…… நல்லாயிருக்கு, அம்மன் பேரு. எம்பேரு வேலாயுதம்..
வாயில் வெத்திலை குதப்பிக் கொண்டு, அப்ப செங்கேனி என்னா பன்றதா முடிவு. வந்துட்ரயா இங்க…
நெரந்தரமாவா ?
ஆமான்ற, வந்தா நல்லாருக்கும், ஒனக்குந்தான் யாருமில்லயே…… வந்துடேன் இங்க, என்றார் கெஞ்சலாய்.
யோசித்தாள். வந்துட்லாம். ஆனா நாம்ப ரெண்டு நா(ள்) பழக்கத்திலே தானே இருக்கோம், ஒத்து வருமா தெரியலயே…
அட என்னா பெரிசா ஊர் கூட்டி, தாலியா…….. கட்டிக்கப் போறோம்.. பாப்போம், ஒத்து வல்லன்னா, ஒன் வழியே போயிடப் போற. நா என் வழி. இதுக்கின்னா செங்கேணி ஓசன…
அப்ப சரி. வந்துட்ரேன். ஓரவத்தி கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு, துணிமணி கொஞ்சமிருக்கு மூட்டய கட்டிட்டு நாளக்கா வந்திட்ரேன்
எனக்கு ரொம்பச் சந்தோஷம், நீ வந்திட்டியானா. எனக்குத் தொண வேணும், தனியாக் கெடந்து வெறுத்துப் போச்சி வாழ…
சற்று யோசித்து, ஆமா……… தயங்கி, இதில, ஒன்னா படுக்கக் கூட உண்டா? சொல்லி, வெடுக்கென தலைக் குனிந்தாள்..
ஒனக்கு ஓணுமின்னா, தோ இப்பவே கூடப் படுத்துக்கலாம். ஆனா கால அகட்டரதெல்லாம் புடிக்காது, அதெல்லா வேணாம்ன்னு நீ சொன்னாலும் பரவாயில்ல. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுது எம்மனசு, நாம்ப ஒன்னாத்தா இருப்போம்ன்னு. டக்குனு எனக்கு, ஒன்ன ரொம்பப் புடிச்சிப் போச்சி செங்கேனி, ஒங்கிட்ட பேசறதே எம்மனசுக்கு நிம்மதியாருக்கு.
நெசமாத்தானா திரும்பி அவர் கையைப் பிடித்தாள்.
ஆமான்ற எட்டி, அவள் தோளைத் தொட்டு இழுத்தார். சாய்ந்து அவர் மடியில் படுத்துவிட்டாள். ஆனால், படுத்த வேகத்தில் எழுந்து உட்கார்ந்து விட்டாள். தலை சாய்த்து மீண்டும் யோசனை.
எனக்குந்தான் நீ சொன்னமாரி, ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. எம்மா சமயம், கொவளக் கொட்டய (குவளைச் செடியின் விதை) அரச்சி குடிச்சிட்டு, போயே போயிட்லாம்ன்னு மனசொடிஞ்சி போனவ நானு, எங்கய்யா போனப்பரம், ஒரு நல்ல வார்த்த சொன்ன மொதோ ஆளு, நீதான். என் பட்னி ஒன் மனச தொட்டுது பாரு, அது போதும்…
முத்து முத்தாய் வடிந்ததை கை எட்டி, விரலால் எடுத்து சுண்டினார்.
சரி….., நீ போயி ராத் தங்கிட்டு, நாள வந்துட்லாம்…
இம் போவலாம் தலைக் குனிந்தாள்.
இன்னா ஓசன ?
இல்ல நா கொஞ்சம் சிக்குத் தீக்கனம், ஒங்கிட்ட பணமிருக்கா…
எவ்ளோ ஓணும்…
பெரிசா ஒன்னுமில்ல, அண்டையில பக்கத்தில கைமாத்தா கொஞ்சம் வாங்கியிருக்கேன், திருப்பிக் கொடுத்திட்டா, நிம்மதியா ஒரேடியா தல முழுவிட்டு வந்துடுவேன்…
எவ்ளோ ஓணுமோ எடுத்துக்கோ, இதான் எங்கையில இப்ப…
மடியை அவிழ்த்து வெத்திலை ஓலைப் பெட்டியைத் திறந்து நீட்டினார். மூன்று நூறு ரூபா நோட்டுக்களை எடுத்தாள்.
போறுமா?
போறும் போறும் முந்தானையில் முடிந்து எழுந்து நின்றாள்.
காலைல சுருக்க வந்துடு…
ஆவட்டும்,
தயங்கி நின்று திரும்பி, அவரை நேருக்கு நேர் பார்த்து, உதடு விரிய காவிப் பல் தெரிய, ஒரு அர்த்தப் புன்னகை.
அது வரக்கும் தாளுமா, அவரும் உற்று நோக்கி சிரித்து, கை நீட்டினார். அவள் குனிந்ததும்,
இல்ல தாளாதுடி,
அவள் தலையைப் பிடித்து, இப்பவே ஓணும், அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.
என்னமோ……. அதெல்லா இல்லன்னாக் கூடப் பரவாயில்லன்ன வீம்பா சொல்லிட்டு, இப்ப இம்மா அவசரப் பட்ற…
அடியே, அது ஒனக்குப் புடிக்காதின்னாத்தான். இப்ப ஒன் கண்ணு சொல்லுது அது ஓணும் இப்பவேன்னு அதான்,
எழுந்தார். இறுக கட்டி அணைத்தார். அவர் மார்பு அளவுதான் அவள் உயரம். மெலிந்த சின்ன உடல். லகுவாக அப்படியே அலாக்காக தூக்கி விட்டார். கழுத்தை கட்டிக்கொண்டு மார்பில் தலையைச் சாய்த்தாள். தூக்கியபடி கொட்டகைக்குள் நுழைந்தார்.
புரண்டு படுத்து கட்டிக் கிடந்தனர். வயிரு முட்ட சாப்பாடு, உடல் சோர உறவு, எல்லாம் சேர்ந்து, அவள் காணாத ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுத்தது. அவர் விழித்து எழுந்து உட்கார்ந்தார். தூங்குபவளை தூங்க விட்டு எழுந்து நடந்தார், கிணற்றடிக்கு. வேட்டியை நனைத்து, துவைத்து தலை குளித்தார்.
ஒறவுக்குப் பொறவு, தலையில தண்ணி ஊத்திட்னம், என்பது அவர் அங்கம்மாவின் கட்டளை.
என்னமோ பாவ காரியம் பண்ணிட்டு, அதுக்குப் பரிகாரம், தலை குளியல், இன்ற பரம்பரையா ஊரிப் போனது, இந்த பொட்டச்சிங்க சடங்கு. ஒங்கள எத்தன ஜென்ம்னாலும் திருத்த முடியாதுங்கடி…
என்று திட்டும் அவர், அவள் மறைந்த பின்னும் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை என்பதுதான் வேடிக்கை. காலை வரை கூடப் பொறுக்க முடியாமல், அந்த இரவு வேலையிலும் குளித்து முடித்து காய்ந்த வேட்டி சுற்றிக் கொண்டு வந்தார். நல்ல இணக்கமான உறவுக்குப் பிறகு, உடலும் உள்ளமும் புத்துணர்வு பெற்றதில், ஆனந்தமாய் இருந்தது.
பத்து நாளுக்கு முன்ன, தா(ன்) இருந்த இருப்பென்ன, எப்டி தலகீழா மாரிப் போச்சி இப்ப. தனக்குன்னு ஒரு வேலை. அதுக்குக் கை நெறைய காசு, சமைச்சிப் போட அக்காமவன்னு பாத்தா, இப்டி ஒரு பொம்பளத் தொணையும் கொண்டாந்து உட்டுட்டீங்களே சாமீ…
சட்டென நெகிழ்ந்து, கண் கலங்க எங்கோ குதிரை மேல் சிலையாய் அமர்ந்திருக்கும், அந்த வெள்ளந்தாங்கி ஐயனாரப்பனை நினைத்து, தலை மேல் கையெடுத்து கும்பிட்டு, அப்படியே கவிழ்ந்து தரையில் மண்டியிட்டு வணங்கினார்
பின் பக்கம் அவள் வந்தது கூடத் தெரியவில்லை. தூங்கி எழுந்து, தலைவிரிக் கோலமாய் அவர் பக்கத்தில் வந்து உட்காரந்து, மடியில் சாய்ந்தாள். குனிந்து அவள் நெற்றிப் பொட்டில் முத்தமிட்டார்.
நல்லா தூங்கின போல…
அவர் கழுத்தில் கை போட்டு இருக்கி உடல் திமிர் எடுத்து முறுக்கி சோர்ந்தாள்.
ஆமா,. எப்டி மாரிப் போச்சி என் நெலம. சாவப் போறோம்ன்னு நெனச்சா துளுத்துக்கிச்சி உசுரு (உயிர்)…
அதே மாரிதான் நானும் பத்து நா முன்ன. ஆனா சாவ எல்லாம் நெனக்கல, வாழப் பிடக்கல, எப்டிப் போவப் போவுது கொற (குறை) காலம் இன்னு நெனச்சா, நீ கெடச்சிட்ட…
கொஞ்ச நேரம் பேசியிருந்து விட்டு, அவர் சொன்னார்,
இன்னிக்கு நேரமாயிடுச்சி, நாளைக்குப் போலாம் இல்லியா நீ…
ஆமா, என்னா அவசரம். நாளைக்குப் போயி, மூட்ட முடிச்சிக் கெட்டி வந்துட வேண்டிதான்.
அப்ப வா இங்கயே நெலாவில படுத்துக் கெடக்கலாம்…
அவள் எழுந்து உள்ளே போய், பாயை கொண்டு வந்து கொட்டகை எதிரே போட்டாள். அவரும் நகர்ந்து பாயில் படுத்து கால் நீட்டினார், அவரை ஒட்டி உட்கார்ந்தாள். முக்கால் நிலவு உச்சிக்கு ஏறி பாலை பொழிந்தது. பல கால அன்னோன்ய தம்பதிகள் போல் பேசிப் பேசி, எப்பொழுது என்றே தெரியாமல் தூங்கிப் போயினர்.
அவர் விடிகாலை எழுந்துக் கொண்டார், அவளும் அரவம் கேட்டு விழித்தாள்..
நல்லா தூங்கினியா தே,
ஆமா, ரொம்ப வருஷமாச்சி இப்படி பக்கத்தில தொண இருக்க, நிம்மதியா தூங்கி.
உடல் முறித்து எழுந்து உட்கார்ந்தாள்.
சுருக்க போயி வந்துடு, நெறைய வேல இருக்கு நமக்கு.
இன்னா……..அய்யா……..நேத்து ராத்திரி குடுத்தது போதலயோ, என்றாள் நக்கலாய் சிரித்து,
ஹ்ஹ்ஹ அதில்லடி, அது தாளும் இன்னம் ஒரு மாசத்துக்கு, நா சொன்னது, இந்த கொட்டாய்க்கு சுத்திலம் மண் சுவரு வச்சி, ஒரு வீடாக்கனம். பொம்பள வந்துட்ட இல்ல, படுக்க மரவு கட்ட வாணாம். அதச் சொன்னேன்…
அவளும் சிரித்து எழுந்து போனாள்.
அடுப்பு மூட்டி சோறு பொங்கி கஞ்சி தயாரித்தாள். நேற்று மீந்த குழம்பு கொஞ்சம், காலை உணவானதும். சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
பத்து மணிக்காய் தலைச் சுமையுடன் திரும்பினாள். அதற்குள் அவர் பாதி வேலை முடித்திருந்தார். அவளும் சேர, சுற்றுச் சுவர் முற்றும் தயாராகி விட்டது. மூங்கில் படல் கித்தான் சாக்கு கதவும் ஆனது. சுருக்கமாய் பகல் உணவானது. சற்று படுத்திருந்து விட்டு, மாலை அக்கா மகள் வீட்டுக்குச் சென்றார்.
ஏம்மாமா நேத்து வல்ல.? அதிகார உரிமைக் குரல்..
செங்கேணி பற்றி அவளிடம் கூறுவதா வேண்டாமா என்ற தயக்கம். அவளுக்குப் புரியாது, சின்னப் பொண்ணு, ஏதும் ஏடா கூடாமா நெனச்சிக்குவா. அப்ரம் பாக்கலாம்..
தினத்துக்கு வர்றது கஷ்டம் டி, ஏதோ கொஞ்சம் பொங்கித் திண்ணுட்டு, வார ஒரு வாட்டி வாரேனே, அவளை சமாதானப் படுத்தினார்.
இரு மாதங்கள் ஓடின.. இருவர் தேவைக்கு அதிகமாவே மாத சம்பளம் தவராமல் வந்தது. இருவர் உழைப்பில், மா மரங்கள் பூத்துக் குளுங்கின. காய் கறி பாத்தியில் கத்தரி, வெண்டை, தக்காளி என காய்த்து, சாக்கு மூட்டையில் கட்டி முதலாளி அம்மா வீட்டுக்குச் சென்றது.
ஒரு வித குறுக்கீடும் இல்லாத, அமைதியான இயற்கையோடு ஒட்டிய வாழ்வு. இருவருக்குள்ளும் அப்படி ஒரு புரிதல். வாய்க்கு ருசியான, வயிற்றிக்கு நிறைவான உணவு, பகல் முழுதும் இருவரும் சேர்ந்து உடல் வருத்தி தோட்ட வேலை. மனம் விரும்பிய நேரத்தில் உடல் பசிக்கு திருப்தியான உறவு, தங்கள் இளமைக் காலத்தில் கிட்டாத மகிழ்ச்சி, நிம்மதியை இந்த அந்திக் காலத்தில் அனுபவித்து புதுவாழ்வு வாழ்கின்றன இந்த பெருசுகள்.
– கதைப் படிக்கலாம் – 10